Last Updated:
ஐதராபாத்தில் யூடியூபர் ஒருவரை வெட்டிக் கொல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள மாதாபூரைச் சேர்ந்தவர் வைஷ்ணவி. யூடியூபரான இவர், மற்றொரு யூடியூபரான ஹரிபாபுவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், தங்களது சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் முதல் சோகமான கதைகள் வரை பல்வேறு வீடியோக்களை இருவரும் தங்களது யூடியூப் சேனலில் பதிவேற்றி வந்தனர். இதன் மூலம், சேனலின் சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கையை அதிகரித்து வந்துள்ளனர். மேலும், தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது போன்ற வீடியோக்களையும் வைஷ்ணவி சொந்த சேனலில் பதிவேற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், நான்கு மாத கர்ப்பமாக இருந்த வைஷ்ணவிக்கும், ஹரிபாபுவுக்கும் இடையே கடந்த மார்ச் மாதம் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஹரிபாபு, தனது மனைவி வைஷ்ணவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டார். இதுகுறித்து புகாரின்பேரில் ஹரிபாபுவை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.
இதனைத்தொடர்ந்து ஜாமினில் வெளியே வந்த ஹரிபாபு, நிஜாமாபாத் நகரில் உள்ள ராஜ ராஜேந்திரா சந்திப்பில் மக்காச்சோள வியாபாரம் செய்து வந்தார். இதனிடையே “ஹரிபாபுவை கொலை செய்யாமல் விடமாட்டோம்” என வைஷ்ணவியின் குடும்பத்தினர் சவால் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மக்காச்சோள வியாபாரம் செய்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஹரிபாபுவை, வைஷ்ணவியின் அண்ணன் காரில் வந்த 2 பேர் சேர்ந்து நடுரோட்டில் வைத்து வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
முன்னதாக காரில் 3 பேர் வந்த நிலையில், ஹரிபாபுவை பார்த்ததும், வைஷ்ணவியின் இளைய சகோதரர் சந்தோஷ் மட்டும் கையில் பட்டாகத்தியுடன் காரில் இருந்து இறங்கி, ஹரிபாபுவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டார். இந்த காட்சிகள் அங்கே இருந்த சிசிடிவியில் அப்படியே பதிவாகி உள்ளது. கொலை செய்து விட்டு சந்தோஷ் அதே காரில் தப்பிச் சென்று விட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ஹரிபாபுவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், வைஷ்ணவியின் இளைய சகோதரர் சந்தோஷ், செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என் தங்கையை கொலை செய்தவனை நான்தான் கொலை செய்தேன். என் தங்கையை கொன்ற ஹரிபாபுவை நானும் கொன்றுவிட்டேன்” என தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பதாகவும், தனக்கு கடுமையான தண்டனை கிடைக்காமல் காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் கதறியுள்ளார்.
தன்னை எப்படியாவது வெளியே கொண்டுவர வேண்டும் என்றும், தனக்கு ஆதரவாக அனைவரும் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் சந்தோஷ் வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொலை செய்த பிறகு தனக்கு பயமாக இருப்பதாகவும், நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று சரணடையப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, காவல் நிலையத்தில் சரணடைந்த சந்தோஷிடம், நிஜாமாபாத் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கணவன் – மனைவியாக சேர்ந்து வீடியோ வெளியிட்ட இருவரும் தற்போது உயிரோடு இல்லை. இதற்கிடையே யூடியூபர் ஹரிபாபு கொலை செய்யப்படும் சிசிடிவி காட்சிகள் ஐதராபாத் முழுவதும் பரவி, அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


