Last Updated:
பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு செய்யவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் உடனான சண்டை நிறுத்தத்திற்கு அமெரிக்கா காரணமல்ல என மத்தி அரசு கூறியுள்ள நிலையில், தாங்களே பேச்சுவார்த்தை நடத்தியதாக டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்படுவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்யவில்லை என மத்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீடு தேவை இல்லை என்றார். ஜம்மு காஷ்மீர் தொடர்பாக எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதனை இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையே நீண்டகால கொள்கையாக வைத்திருப்பதாகவும், தற்போதும் அதையே தொடர்வதாகவும் தெரிவித்தார்.
மேலும் அந்தக் கொள்கையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தானின் பிடியிலிருந்து மீட்க வேண்டும் என்பதே இந்தியாவின் ஒரே எண்ணம் என்றும் அவர் கூறினார். சண்டை நிறுத்தம் செய்யாவிட்டால், இந்தியா – பாகிஸ்தானுடன் வர்த்தகம் செய்யப் போவதில்லை என மிரட்டியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதை முற்றிலும் நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடங்கிய மே 7-ஆம் தேதியிலிருந்து சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்த மே 10-ஆம் தேதி வரை இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ராணுவ நடவடிக்கை தொடர்பாக மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அவர் கூறினார்.
இந்நிலையில், இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Delhi,Delhi,Delhi
May 14, 2025 10:22 AM IST


