Last Updated:
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், முன்னாள் அமைச்சர் தர்மேந்திர பிரதானை தொடர்புபடுத்தி அவதூறாக சித்தரித்து வீடியோ பரப்பப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியை அவதூறான வகையில் சித்தரித்த வீடியோக்கள் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பரவிய விவகாரத்தில், மெட்டா நிறுவனத்தின் இந்திய தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் நடத்திய போராட்டம், சமூக வலைதளங்களிலும் எதிரொலித்தது. அப்போது, பிரதமர் மோடியின் உருவத்தை வைத்து, ஆட்சேபனைக்குரிய வகையில் ஏஐ தொழில்நுட்பத்தில் படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கியதாகவும், தவறான தகவலை பரப்பும் வகையிலும், வெறுப்பை பரப்பும் வகையிலும், பொது அமைதியை குலைக்கும் வகையிலும் வீடியோக்கள் இருந்ததாகவும் தெலங்கானா பாஜக நிர்வாகிகள் புகார் அளித்தனர்.
குறிப்பாக, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், முன்னாள் அமைச்சர் தர்மேந்திர பிரதானை தொடர்புபடுத்தி அவதூறாக சித்தரித்து வீடியோ பரப்பப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ரீல்ஸ்களில் இந்த அவதூறு வீடியோக்கள் பரவியதாக புகார் கூறப்பட்ட நிலையில், அதன் தாய் நிறுவனமான மெட்டாவின் இந்திய தலைவர் அருண் ஸ்ரீநிவாஸ் மீது ஐதராபாத் சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், ஆட்சேபனைக்குரிய வீடியோக்களை பரப்பியதாக சமூக வலைத்தள கணக்கு வைத்திருக்கும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல், ஆபாச உள்ளடக்கத்தை வெளியிடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Jul 31, 2026 12:52 PM IST


