Last Updated:
July National Charter 2025 | ஜூலை தேசிய சாசனப்படி ஒருவர் இரண்டு முறை மட்டுமே பிரதமராக இருக்க முடியும். தற்போதுள்ள நாடாளுமன்றம் மேலவை, கீழவை என இரண்டு அவைகளாக மாற்றப்படும் உள்ளிட்ட முக்கிய மாற்றங்கள் சட்டமாகவுள்ளது.
வங்கதேசத்தில் தாரிக் ரஹ்மானின் வங்கதேச தேசியவாத கட்சி தலைமையிலான கூட்டணி 212 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் பிரதமராக இன்று பதவியேற்றுக்கொள்கிறார்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட புரட்சியைத் தொடர்ந்து, அங்கு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். பல குழப்பங்களுக்கு மத்தியில் பொருளாதார நிபுணர் முகமது யூனஸ் தலைமையில் அங்கு இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில், அண்மையில் மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கூட்டணி 212 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றுள்ளது. ஷஃபிகுர் ரஹ்மான் தலைமையிலான ஜமாத்-இ-இஸ்லாமி கூட்டணி 77 இடங்களை கைப்பற்றியுள்ளது. தேசிய குடிமக்கள் கட்சி 4 இடங்களிலும் சுயேச்சைகள் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
பெரும்பான்மைக்கு 151 இடங்கள் தேவைப்படும் நிலையில், வங்கதேச தேசியவாத கட்சி மட்டும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு வங்கதேசத்தில் அக்கட்சி ஆட்சி அமைக்கிறது. வங்கதேச தேசியவாத கட்சித் தலைவர் தாரிக் ரஹ்மான் பிரதமராக இன்று பதவியேற்றுக்கொள்கிறார்.
அமோக வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை வங்கதேசம் பெற வேண்டும் எனவும் மோடி கூறியுள்ளார்.
இந்தத் தேர்தலை ஒரு “திட்டமிட்ட நாடகம்” என்று முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார். தனது கட்சியான ‘அவாமி லீக்’ பங்கேற்காத இந்தத் தேர்தல், ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரானது என்றும், இதற்கு அரசியலமைப்பு ரீதியாக எந்தத் தார்மீகத் தகுதியும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலோடு ஜூலை தேசிய சாசனத்தை அமல்படுத்துவது தொடர்பான பொது வாக்கெடுப்பும் நடைபெற்றது. ஜூலை தேசிய சாசனம் தேவை என சுமார் 4.80 கோடி மக்களும், தேவையில்லை என 2.25 கோடி மக்களும் வாக்களித்துள்ளனர்.
2024 ஜூலை மாத மாணவர் புரட்சிக்குப் பிறகு நாட்டின் அரசியலமைப்பை மாற்றியமைக்க உருவாக்கப்பட்டது ஜூலை தேசிய சாசனம். அதன்படி ஒருவர் இரண்டு முறை மட்டுமே பிரதமராக இருக்க முடியும். தற்போதுள்ள நாடாளுமன்றம் மேலவை, கீழவை என இரண்டு அவைகளாக மாற்றப்படும்.
தேர்தல் காலங்களில் நாட்டை நிர்வகிக்க நடுநிலையான இடைக்கால அரசு முறை மீண்டும் கொண்டு வரப்படும். தடையற்ற இணையச் சேவை மற்றும் தனிநபர் தரவுப் பாதுகாப்பு போன்றவை அடிப்படை உரிமைகளாக மாற்றப்படும்.
Feb 14, 2026 12:19 PM IST
July Charter | பிரதமராக பதவியேற்கும் தாரிக் ரஹ்மான்… நடைமுறைக்கு வரப்போகும் ‘ஜூலை தேசிய சாசனம்’


