கோலாலம்பூர்:
பினாங்கு கடல் பகுதியில் சட்டவிரோதமாகக் கச்சா எண்ணெயைப் பரிமாற்றம் செய்ய முயன்ற இரண்டு பிரம்மாண்ட எண்ணெய் டேங்கர் கப்பல்களை மலேசியக் கடல்சார் அமலாக்க முகமை (MMEA) அதிரடியாகக் கைப்பற்றியுள்ளது. இந்த நடவடிக்கையில் சுமார் 512 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கச்சா எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை அதிகாலை 1.00 மணியளவில், முக்கா ஹெட் (Muka Head) பகுதிக்கு மேற்கே 24 கடல் மைல் தொலைவில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
அனுமதியின்றி நடுக்கடலில் ஒரு கப்பலிலிருந்து மற்றொரு கப்பலுக்கு எண்ணெய் மாற்றப்படுவதை (Ship-to-Ship Transfer) அதிகாரிகள் கண்டறிந்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட எண்ணெயின் மதிப்பு RM512 மில்லியன் ஆகும். மேலும், பிடிபட்ட இரண்டு கப்பல்களின் மொத்த மதிப்பு 718 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சட்டவிரோதச் செயலில் ஈடுபட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 53 சிப்பந்திகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில்:சீனா, மியன்மார்,ஈரான்,பாகிஸ்தான்
இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர்.
முறையான ஆவணங்கள் மற்றும் அனுமதியின்றி நங்கூரமிட்டது மற்றும் எண்ணெய் பரிமாற்றம் செய்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. “மலேசியக் கடல் எல்லையில் சட்டவிரோதப் பொருளாதார நடவடிக்கைகளைத் தடுக்க இத்தகைய கண்காணிப்புப் பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும்,” என கடல்சார் அமலாக்க முகமை தெரிவித்துள்ளது.



