Last Updated:
பிகாரில் 3 அமைச்சர்களைத் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களின் சொத்து மதிப்பும் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு இருப்பதை விட அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
பிகாரில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டின் கடைசி நாளில் அனைத்து அமைச்சர்களும் தங்களின் சொத்து விவரங்களை வெளியிடுவது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2025 ஆம் ஆண்டின் கடைசி நாள் நிலவரப்படி, அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரிடம் ஒரு கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து இருப்பது தெரியவந்துள்ளது.
இது, கடந்த 2024 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 68 ஆயிரத்து 455 ரூபாய் அதிகமாகும். மேலும், அவரது கையில் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் இருப்பதாகவும், 3 வங்கிக் கணக்குகளில் 57 ஆயிரம் ரூபாய் இருப்பு வைத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
டெல்லி துவாரகாவில் ஒரு குடியிருப்பு, 2 தங்க மோதிரம், 1 வெள்ளி மோதிரம், 10 பசுக்கள், 13 கன்றுகளை நிதிஷ் குமார் வைத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே சமயம், அம்மாநில துணை முதலமைச்சரான பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி 6 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வைத்துள்ளார். அதில், ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரொக்கமாகவும், 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான துப்பாக்கியும் அடங்கும்.
மற்றொரு துணை முதலமைச்சரான பாஜகவை சேர்ந்த விஜய் குமார் சின்ஹா, நிதிஷ் குமாரை விட 8 மடங்கு அதிக சொத்து வைத்துள்ளார். இதே போன்று, நிதிஷ் குமார் அமைச்சரவையில் 3 பேரை தவிர மற்ற அனைவருமே அவரை விட பணக்காரர்கள்.
Jan 02, 2026 10:17 PM IST


