Last Updated:
பிகார் தேர்தலில் 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு, நரேந்திர மோடி, அமித் ஷா, தேஜஸ்வி யாதவ், ராகுல் காந்தி உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
பிகாரில் முதல்கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், நாளை 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கு நாளை மற்றும் 11ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.
முதல்கட்டமாக 121 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அதற்கான தேர்தல் பரப்புரை நேற்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. கடைசி நாளில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, 4 மாநில முதலமைச்சர்கள், லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி என பல்வேறு தலைவர்கள் திரண்டு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதில் நமோ செயலி மூலம் பெண்களிடம் உரையாடிய பிரதமர் மோடி, பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி சந்தேகத்திற்கு இடமின்றி வெற்றி பெறும் என்றும், அதில் பெண்களின் பங்கு அளப்பரியதாக இருக்கும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார். தர்பங்கா பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் அமித் ஷா, வாக்கு இயந்திரத்தில் தாமரை சின்னத்தில் அழுத்தி பிகாரில் மீண்டும் காட்டு ஆட்சியை தடுக்க மக்கள் முன்வர வேண்டும் என்றார்.
அதே தர்பங்கா தொகுதியில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும், கோபால்கஞ்ச் பகுதியில் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா-வும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்கு சேகரித்தார். அவுரங்காபாத்தில் பிரசாரம் செய்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பிகாரில் தோல்வி முகத்தை தவிர்க்க பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித் ஷாவும் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக விமர்சித்தார்.
அதேபோல், பிகாரில் மகா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஜனவரி 14இல் மகா சக்கராந்தி நாளில் பெண்களின் வங்கிக் கணக்கில் 30 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுமென ஆர்ஜேடி தலைவரும், மகாகத்பந்தன் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் அறிவித்தார். ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பிகார் தேர்தலை முன்னிட்டு முதல்முறையாக பாட்னாவில் வாகனப் பேரணி சென்று ஆதரவு திரட்டினார்.
நாளை நடைபெற உள்ள முதல் கட்ட தேர்தலில் மொத்தம் ஆயிரத்து 314 பேர் போட்டியிடுகின்றனர். இதில் ஆர்ஜேடி கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் Raghopur தொகுதியில் களம் காணுகிறார். தேஜஸ்வியின் சகோதரரும் ஜன்சகதி ஜனதா தள தலைவருமான தேஜ் பிரதாப் யாதவ் Mahua தொகுதியிலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி Tarapur தொகுதியிலும் மற்றொரு துணை முதலமைச்சர் விஜய் குமார் சின்ஹா Lakhisarai தொகுதியிலும் களம் காண்கின்றனர்.
November 05, 2025 6:50 AM IST


