பிகார் சட்டமன்றத் தேர்தலில், முதல் கட்டமாக கடந்த 6ஆம் தேதி 121 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. நாளை மறுநாள் இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இறுதிக்கட்ட பரப்புரை இன்றுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பிகாரில் முகாமிட்டுள்ளனர். சீதாமரி மாவட்டத்தில் நடந்த பரப்புரை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, முதல் கட்ட தேர்தலில் 65 சதவீத அளவுக்கு வாக்குப்பதிவானதை சுட்டிக்காட்டி, வாக்காளர்கள் இந்தியா கூட்டணிக்கு 65 வோல்ட் ஷாக் கொடுத்திருப்பதாக தெரிவித்தார்.
இந்தியா கூட்டணி தலைவர்கள் தங்கள் வாரிசுகளை முதலமைச்சர், எம்பி, எம்.எல்.ஏக்களாக ஆக்குவதாகவும், அப்பாவி குழந்தைகளை குண்டர்களாக மாற்ற முயற்சிப்பதாகவும் பிரதமர் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், கட்டிஹார் நகரில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, பிரிட்டிஷ் பேரரசை எதிர்த்து உரிமைக்காக மகாத்மா காந்தி போராடியதை போன்று, நரேந்திர மோடி பேரரசை எதிர்த்து இந்தியா கூட்டணி போராடி வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்ததே அதிக வாக்குப்பதிவுக்கு காரணம் எனவும் பிரியங்கா காந்தி கூறி உள்ளார். வாக்குரிமையை திருட தொடங்கிவிட்டதாகவும் சாடி உள்ளார். தொலைநோக்கி வைத்து பார்த்தால் கூட தெரியாத அளவுக்கு இந்தியா கூட்டணிக்கு தோல்வி கிடைக்கும் என்றும், நாடாளுமன்ற தேர்தலின் போதும் 400 தொகுதிகளுக்கு மேல் தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றும் என்று கதை விட்டதாகவும், ஆனால் பாஜக பெரும்பான்மையை பெறவில்லை என கூறியுள்ளார்.
இதற்கிடையே, பிகார் தேர்தலில் 65 சதவீதம் அளவுக்கு வாக்குப்பதிவு என்பது ஆட்சி மாற்றம் நிச்சயம் என்பதற்கான அடையாளம் என்று, ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். ஜன் சுராஜ் கட்சியை மக்கள் மாற்றமாக நினைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பூர்னியா நகரில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிஹாரில் இருக்கும் ஊடுருவல் காரர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதைப் போல, அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தை விட்டே வெளியேற்றுவோம் என கூறினார்.
பிகாரில் 160 இடங்களில் வெற்றி பெறுவோம் என நியூஸ் 18-க்கு மத்திய அமைச்சர் அமித் ஷா பிரத்யேக பேட்டி அளித்திருந்த நிலையில், அதற்கு, டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எதிர்வினையாற்றியுள்ளார். மக்கள் மாற்றத்திற்கு தயாராகிவிட்டதையே அதிக வாக்குப்பதிவு காட்டுவதாகவும் கார்கே குறிப்பிட்டார்.
Bihar Sharif,Nalanda,Bihar
November 09, 2025 9:11 AM IST

