Last Updated:
பிகாரில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட விவரங்களை வழங்க சட்டத்தில் இடமில்லை என்று தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
பிகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை வெளியிடவோ அல்லது வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தை கூறவோ சட்டத்தில் இடமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
பிகாரில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதில், 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதற்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களைச் சனிக்கிழமைக்குள் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது. அதில், பிகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களைத் தர சட்டத்தில் இடமில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டதற்கான காரணத்தை கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல், எந்தவொரு வாக்காளர் பெயரும் நீக்கப்படாது என தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.
இந்நிலையில், பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், பிகாரில் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் மூன்று லட்சம் வீடுகளின் எண்கள் பூஜ்யம் என குறிப்பிடப்பட்டுள்ளதாக விமர்சித்தார். துணை முதலமைச்சரும், பாஜக தலைவருமான விஜய் குமார் சின்ஹா இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளராகப் பதிவு செய்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
Puducherry (Pondicherry)
August 10, 2025 2:04 PM IST
பிகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டம்


