கோலாலம்பூர்,:
பாஸ் (PAS) கட்சிக்கு அரசாங்கத்தை அமைக்கும் திறனோ தகுதியோ இல்லை என்று முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி (Rafizi Ramli) கடுமையாக விமர்சித்துள்ளார்.
“பாஸ் கட்சிக்கு அரசை அமைக்கும் அடிப்படைத் தகுதி என்ன? அவர்கள் ஆளும் மாநிலங்களில் எந்தவித வளர்ச்சியையும் பதிவு செய்யவில்லை. ஒரு நிர்வாகத்தை முன்னெடுக்க பொருளாதாரக் கட்டமைப்பு தேவை. ஆனால் பாஸ் கட்சியிடம் பொருளாதாரக் கொள்கைகளோ, வருவாயை உருவாக்கும் திட்டங்களோ எதுவும் இல்லை,” என்று ரஃபிசி ரம்லி சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் கூறுகையில், பாஸ் கட்சி மக்களிடமிருந்து அனுதாபத்தை நாடி ஆதரவைப் பெறுவதிலேயே ஈடுபட்டுள்ளது என்றும், கிளாந்தான் மற்றும் திரங்கானுவை பல ஆண்டுகளாக ஆளும் நிலையில், அந்த மாநிலங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
“இன்றும் அவர்கள் முந்தைய அரசாங்கம் அமைத்த அடித்தள வளங்களையே நம்பி நிர்வாகம் நடத்துகிறார்கள். கிளாந்தானில் 12 அரசு நிறுவனங்கள் உள்ளன — அவற்றையும் முந்தைய மாநில அரசு தான் நிறுவியது. ஆனால் அவற்றின் வருவாய் அதன் உண்மையான திறனை விட மிகக் குறைவு. திறமையான நிர்வாகம் இருந்தால், அந்த நிறுவனங்கள் தற்போதைய வருமானத்தை விட பல மடங்கு ஈட்டியிருக்கும்,” என ரஃபிசி தெரிவித்தார்.
ரஃபிசி ரம்லி தனது உரையில், “பாஸ் கட்சி அதிகாரத்திற்கான பேராசையில் மூழ்கியிருக்கிறது; ஆனால் ஆட்சிக்குத் தேவையான தகுதி, திட்டம் மற்றும் திறமை ஆகியவை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன” எனக் கூறினார்.

