Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரஜத் பட்டிதார் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளார். ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்பதால் 14 வீரர்கள் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் ருதுராஜ், ஜெய்ஸ்வால், நமன் திர் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் ரஜத் பட்டிதாருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒருநாள் தொடர் நடக்கும் நாட்களில் ஆசியக் கோப்பை 2026 தொடரும் நடக்க இருப்பதால், சுமார் 14 வீரர்கள் விளையாட வாய்ப்பு இல்லை என்ற சூழல் நிலவியது.

இதனால் இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் கடந்த ஒருநாள் தொடரை விடவும் மொத்தமாக 8 வீரர்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களின் இடத்தில் சீனியர் வீரர்களான சிராஜ், ஜடேஜா ஆகியோரும், இளம் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல், நிதிஷ் ரெட்டி ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
இங்கிலாந்து ஒருநாள் தொடரில் ஆடியவர்களில் ஹர்ஷ் துபே மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர். அவர்களின் இடத்தில் ஆகிப் நபி சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் மும்பை இந்தியன்ஸ்ஸ் அணியின் அதிரடி வீரர் நமன் திர் இந்திய அணிக்காக அறிமுகம் செய்யப்பட உள்ளார். இவர்கள் இருவருமே இந்திய ஒருநாள் அணியில் முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஹர்சித் ராணா தொடர்ச்சியாக காயம் அடைவதால், ஆகிப் நபியை இந்திய அணி தேர்வு செய்திருப்பதாக தெரிகிறது. அதேபோல் ரியான் பராக் காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால், நமன் திர் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆனால் 2 சீசனில் தொடர்ச்சியாக ஆர்சிபி அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த ரஜத் பட்டிதார் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.
இதனால் ஆர்சிபி அணி ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர். ரஜத் பட்டிதார் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாததற்கு அவரின் வயதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. 33 வயதை எட்டிவிட்ட சூழலில், இன்னும் 3 ஆண்டுகள் வரையில் மட்டுமே அவரால் சிறப்பாக விளையாட முடியும். இதனால் அந்த இடத்திற்கு இளம் வீரரை தேர்வு செய்ய இந்திய அணி நிர்வாகம் விரும்புவதாக பார்க்கப்படுகிறது.

