Last Updated:
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் நாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாலஸ்தீனம் எனும் நாடே இருக்காது என பகீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
”பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் தலைவர்கள், பயங்கரவாதத்துக்கு பரிசை வழங்குகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அது நடக்கப்போவது இல்லை. பாலஸ்தீனம் எனும் நாடே இருக்காது” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காசாவில் அமைதி நிலைநாட்டுவதை உறுதி செய்யும் விதமாக இஸ்ரேலுக்கு நெருக்கடி கொடுக்க பாலஸ்தீனத்தை ஆஸ்திரேலியா தனி நாடாக அங்கீகரித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாகத் தெரிவித்தார்.
இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ள இங்கிலாந்து, கனடா, போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் பாலஸ்தீன மக்களுக்கு ஒருமித்த ஆதரவை அளித்துள்ளன. அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜி7 கூட்டமைப்பில் இருந்து முதல் நாடாக கனடா, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்திருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. ஐநா பொதுச்சபை கூட்டத்திற்கு முன்னதாக, எதிர்கால உச்சிமாநாடு இன்று தொடங்குகிறது. இக்கூட்டத்தில் பாலஸ்தீனத்திற்கு தேசிய அங்கீகாரம் வழங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்தான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாலஸ்தீனம் எனும் நாடே இருக்காது. நான் அமெரிக்காவில் இருந்து திரும்பியதும், எங்கள் நிலத்தின் மையப்பகுதியில் ஒரு பயங்கரவாத அரசை திணிக்கும் முயற்சிக்கான பதில் அளிக்கப்படும்.
அக்டோபர் 7 படுகொலைக்குப் பிறகும் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் தலைவர்கள், பயங்கரவாதத்துக்கு பரிசை வழங்குகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அது நடக்கப்போவது இல்லை. ஜோர்டான் நதியின் மேற்கில் எந்த பாலஸ்தீன அரசும் இருக்காது.
பல ஆண்டுகளாக, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்து வரும் அழுத்தத்திற்கு மத்தியில், பயங்கரவாத அரசு உருவாவதை நான் தடுத்து வருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
September 22, 2025 6:32 PM IST
“பாலஸ்தீனம் எனும் நாடே இருக்காது..” – ஆதரவளித்த நாடுகளுக்கு இஸ்ரேல் பகீர் எச்சரிக்கை


