பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இலங்கை சார்பில் ஆறு வீர, வீராங்கனைகள் பங்கேற்பதை உறுதி செய்திருக்கும் தேசிய ஒலிம்பிக் குழு, பங்கேற்பவர்களில் நான்கு பேர் நேரடித் தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவித்தது.
‘கடந்த 2021 டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இலங்கை சார்பில் ஒன்பது வீர, வீராங்கனைகள் பங்கேற்றபோதும் அதில் எட்டுப் பேர் வைல்ட் கார்ட் முறையிலேயே தகுதி பெற்றனர். எனினும் இம்முறை பங்கேற்கும் நால்வர் நேரடித் தகுதி பெற்றுள்ளமை பெருமை அளிக்கும் விடயமாகும்’ என்று தேசிய ஒலிம்பிக் குழு தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் நேற்று (08) கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி எதிர்வரும் ஜூலை 26 ஆம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் 11 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பூப்பந்தாட்டப் போட்டியில் விரேன் நெத்தசிங்க இலங்கை சார்பில் பங்கேற்கவிருப்பதோடு நீச்சல் போட்டிகளில் கங்கா செனவிரத்ன மற்றும் கைல் அபேசிங்க பங்கேற்கவுள்ளனர்.

ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் அருண தர்ஷனவும், பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் தருஷி கருணாரத்னவும், பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நதீஷா லேகம்கேவும் ஒலிம்பிக் செல்லவுள்ளனர்.
எனினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தெற்காசியாவின் அதிவேக வீரர் யுபுன் அபேகோன் ஒலிம்பிக் தகுதியை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் விளக்கம் அளிக்கும் ஊடக சந்திப்பே தேசிய ஒலிம்பிக் குழு கேட்போர்கூடத்தில் நேற்று இடம்பெற்றது. இதில் பேசிய தேசிய ஒலிம்பிக் குழு செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா கூறியதாவது,
‘உலகெங்கும் இருந்து வெறும் 10500 அளவான வீர, வீராங்கனைகளே ஒலிம்பிக் தகுதி பெறும் நிலையில் அந்த இலக்கை எட்டுவது பெரும் சவாலானதாகும். அந்த வகையில் இலங்கையில் இருந்து ஆறு பேர் தகுதி பெற்றிருப்பது முக்கிய அடைவாகும். அடுத்த ஒலிம்பிக்கில் இலங்கை சார்பில் 20 வீர, வீராங்கனைகளை அனுப்பும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.
இம்முறை ஒலிம்பிக் போட்டியில் 6 வீர, வீராங்கனைகள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்கள் அதேபோன்று அணியின் அதிகாரிகள் என்று மொத்தம் 15 பேர் பாரிஸ் செல்லவுள்ளனர்.
இதில் பூப்பந்து மற்றும் நீச்சல் வீர, வீராங்கனைகள் முன்கூட்டியே பாரிஸ் சென்று போட்டிக்கு முன்னர் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளதோடு தடகள வீர, வீராங்கனைகள் ஒலிம்பிக் ஆரம்ப விழாவுக்கே பாரிஸ் பயணிக்கவுள்ளனர். தடகள வீரர்கள் ஒலிம்பிக்கில் தகுதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் அவர்களுக்கு பாரிஸில் முன்கூட்டிய பயிற்சிகளை ஏற்பாடு செய்வதற்கு முடியாமல்போனது என்று பாரிஸ் செல்லும் இலங்கை குழாத்தின் தலைமை அதிகாரி சந்தன லியனகே தெரிவித்துள்ளார்.
இதில் கடந்த காலங்களில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கச் சென்ற வீரர்கள் போட்டியின் நடுவில் காணாமல் போன சம்பவங்கள் காரணமாக இம்முறை பாரிஸ் செல்லும் வீர. வீராங்கனைகள் தமது போட்டி முடிந்து இரண்டு நாட்களில் கண்டிப்பாக இலங்கை திரும்ப வேண்டும் என்று கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் லியனகே சுட்டிக்காட்டினார்.
இம்முறை பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நிகழ்வு ஜூலை 26 ஆம் திகதி பாரிஸ் நேரப்படி 19.30 இற்கு நடைபெறவுள்ளது. இதில் இலங்கை சார்பில் நதீஷா லேகம்கே மற்றும் விரென் நெத்தசிங்க தேசிய கொடியை ஏந்திச் செல்லவுள்ளனர். இதில் ஹாங்சுவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற லேகம்கே பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இலங்கை குழாத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய ஒலிம்பிக் போட்டிக்கான உத்தியோகபூர் ஆடை அனுசரணையாளராக மாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் செயற்படுவதோடு ஆரம்ப நிகழ்வுக்கான ஆடை அனுசரணையை லொவி சிலோன் நிறுவனம் வழங்குகிறது. இலங்கை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான முழு செலவையும் தேசிய ஒலிம்பிக் குழு ஏற்றிருப்பதாக மெக்வெல் டி சில்வா தெரிவித்தார்.

&w=1200&resize=1200,675&ssl=1)