Last Updated:
உலகளாவிய புத்தாக்க மையமாக இந்தியாவை மாற்றுவதே அரசின் இலக்கு என நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார். இதற்காக, குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து குதிரை பூட்டப்பட்ட வண்டியில் திரௌபதி முர்மு, அரசு மரியாதையுடன் நாடாளுமன்றம் சென்றார்.
செங்கோல் முன்னதாக கொண்டு செல்லப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். அவரை துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா வரவேற்றனர். பின்னர் குடியரசுத் தலைவரின் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. அப்போது பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மற்றும் கும்பமேளாவில் உயிரிழந்த பக்தர்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.
மத்திய அரசின் திட்டங்களை பட்டியலிட்ட அவர், அதனால் மக்கள் அடைந்துள்ள பயன்களையும் எடுத்துரைத்தார். குறிப்பாக, பாதுகாப்புத் துறையில் இந்தியா தன்னிறைவு அடைந்ததாகக் கூறிய அவர், இந்தியாவில் தயாரிப்போம் என்ற நிலையைக் கடந்து உலகிற்காக தயாரிப்போம் என்ற நிலையை நாடு எட்டி இருப்பதாகக் கூறினார்.
டிஜிட்டல் மோசடி, டீப் ஃபேக் ஆகியவை சமூக, பொருளாதார மற்றும் தேச பாதுகாப்பு மிகவும் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறிய அவர், அதனைத் தடுக்க அரசு தீவிர முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவரின் உரையை, துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆங்கிலத்தில் வாசித்தார்.
January 31, 2025 5:07 PM IST


