கோத்தா திங்கி:
கோத்தா திங்கி–குளுவாங் பிரதான சாலையின் 8.4 கிலோமீட்டர் தொலைவில் இன்று நிகழ்ந்த கார் விபத்தில் 5 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்தான்.
இந்த விபத்து குறித்து கோத்தா திங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்பரிண்டெண்டண்ட் யூசோப் ஒத்மான் கூறுகையில், மதியம் 1.45 மணியளவில் பெரோடுவா மைவி (Perodua Myvi) மற்றும் பெரோடுவா அல்சா (Perodua Alza) ஆகிய இரு கார்களுக்கு இடையே இந்த மோதல் ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.
“பெரோடுவா மைவி கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பாதையில் நுழைந்ததால், பெரோடுவா அல்சா காரின் மீது மோதியதாக நம்பப்படுகிறது,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட அந்த அல்சா காரை 61 வயது மூதாட்டி ஓட்டிச் சென்றார். அவருடன் அவரது 5 வயது பேரனும் பயணம் செய்துள்ளான்.
விபத்தில் காயமடைந்த அந்தச் சிறுவன், கோத்தா திங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தான்.
அவனது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-ன் பிரிவு 41(1)-ன் கீழ் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.




