Last Updated:
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது
டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ் பாஜகவில் இணைந்துள்ளார். மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு மற்றும் சுகந்தா மஜும்தார் ஆகியோர் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார். இணைப்பு விழாவில் பேசிய லியாண்டர் பயஸ் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் ஆகியோருக்குத் தனக்கு தேசப்பணி செய்ய வாய்ப்பளித்தற்காக அவர் நன்றி தெரிவித்தார். தனது அரசியல் பயணத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் சார்ந்த விவகாரங்களில் அதிக கவனம் செலுத்தப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் விளையாடத் தொடங்கிய 1986 காலகட்டத்தில் போதிய வாய்ப்புகள் இல்லை என்றும், தற்போது உள்கட்டமைப்புகள் மேம்பட்டிருந்தாலும் மேற்கு வங்கத்தில் விளையாட்டுத் துறை இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
அவரை வரவேற்ற பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார், லியாண்டர் பயஸின் வருகை வரவிருக்கும் தேர்தலில் கட்சிக்கு பெரும் பலத்தைத் தரும் என்றும், அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவார் என்றும் உறுதிபடத் தெரிவித்தார். டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த ஒரு ஆளுமை கட்சியில் இணைந்தது பாஜகவுக்குப் பெருமிதம் அளிப்பதாக அவர் கூறினார்.
1996 அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று, டென்னிஸில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் ஆசிய வீரர் என்ற சாதனையைப் படைத்தவர் லியாண்டர் பயஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, 2021-ல் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த பயஸ், அங்குப் பெரிய அளவில் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. குறிப்பாக கோவா மாநிலக் குழுவில் அவர் சேர்க்கப்படாதது போன்ற நிகழ்வுகள் அவர் திரிணாமுல் காங்கிரஸில் ஓரங்கட்டப்பட்டதை வெளிப்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்தன.
மார்ச் 24 அன்று பாஜக தலைவர்களைச் சந்தித்ததில் இருந்தே அவர் பாஜகவில் இணையப்போவதாகப் பேச்சுக்கள் அடிபட்டன. தற்போது அவர் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், மே 4 அன்று தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.


