543 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இன்றைய தேர்தல் களத்தில் அசைக்க முடியாத சக்தியாக பாரத ஜனதா கட்சி விளங்குகிறது.
3வது முறை யாக மீண்டும் அக்கட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற விடக் கூடாது என்ற பெருமுயற்சியில் அரசியல் எதிர்க்கட்சிகள் பணி செய்து வருகின்றன.
பாரத ஜனதா கட்சி மதம் சார்ந்த முன்முயற்சிகளை (Communalism)
மேற்கொண்வருவதாகவும், தேசியம், இந்துத்துவா என்ற
பெருங்கதையாடல்களை (larger political Discourse) நிறுவ
முயல்வுவதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன. பாஜக என்பது தீவிர ‘இந்துத்துவா’ மட்டுமே எனப்பொதுதுமக்கள் மனங்களில் இடம்பெறுவதை எதிர்க்கட்சிகள் ஓரளவு சாதித்துள்ளன.
ஆனால், அது உண்மையிலேயே அப்படித்தானா? ‘இந்துத்துவம்’, ‘ ‘இந்து தேசியம்’ போன்ற பெருங்கதையாடல்களை மட்டும்தான் பாஜக முன்மொழிகிறதா? இந்த அணுகுமுறையால் எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் களத்தில் வெற்றிபெற வாய்ப்பிருக்கிறதா? போன்ற கேள்விகள் பதில் தேடுவது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்திய அரசியல் வரலாறு காட்டும் உண்மை என்ன?
பாஜக என்பது பெரும்பான்மை வாய்ந்த இந்து மக்களுக்கு இணக்கமாக இருப்பதாகவும், சிறுபான்மைச் சமூகங்களுடன் மட்டுமே முரண்பட்டு நிற்பதாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், உண்மை மிகவும் சிக்கலானது.
உதாரணமாக, கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எடுத்துக் கொள்வோம். இந்த 17வது மக்களவைத் தேர்தலுக்கு முன்கூட்டி நடந்த மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி அடைந்தது. விவசாயிகள் பிரச்சனை, வேலைவாய்ப்பின்மை, தலித்துகள் மீதான வன்முறை, பொருளாதார வீழ்ச்சி போன்ற பல்வேறு காரணங்களினால் ஆளும் பாஜக அரசு பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டது. 2014 தேர்தலின் போது காணப்பட்ட ‘மோடி அலை 2019ல் இல்லை.
இதுதவிர, உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மகா கூட்டணியை அமைத்தது. பாஜகவுக்கு எதிராக அமைக்கப்பட்ட இந்த கூட்டணி வாக்குகள் மட்டும் 40%க்கும் அதிகமானதாக பார்க்கப்பட்டது. இதனால், HINDU BLOC என்று சொல்லக்கூடிய மாநிலங்களில் (பீகார், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம்) பாஜக மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2019 தேர்தல் முடிவுகள் அனைவரின் கணிப்புகளை தவிடு பொடியாக்கியது. உத்தர பிரதேச மாநிலத்தில் அக்கட்சி 51% வாக்குகளையும், பீகார் மாநிலத்தில் அக்கட்சி 53% வாக்குகளையும் பெற்றது.
பாஜகவின் வெற்றிக்கு காரணம் என்ன?
மண்டல் கமிஷன் இடஒதுக்கீட்டுக்குப் பிறகு, பீகார், உத்தர பிரதேசம் மாநிலங்களில் ஒபிசி பிரிவினர் அதிகாரம் பெறத் தொடங்கினர். உத்தர பிரதேசம் மாநிலத்தில் முலாயம் சிங் யாதவ் தனிக்கட்சித் தொடங்கி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார். பீகாரில் நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் அரியணை ஏறினர். ராஜஸ்தானில் ஜாட் வகுப்பினர் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்தனர்.
இதன் காரணமாக, இந்தி பேசும் மாநிலங்களில் பிராமணர்கள், தக்கூர், பணியா போன்ற உயர்சாதி வகுப்பினர் பாஜகவின் அரசியலோடு தங்களை இணைத்துக் கொண்டனர். யாதவ் அல்லாத வாக்காளர்கள் மோடியின் வருகையை ஆதரித்தனர். அதேபோன்று, தலித் பிரிவுகளில் வால்மீகி, பாசிஸ் போன்ற ஜாதவ் இல்லாத வாக்காளர்களும் மோடியை ஆதரிக்கின்றனர். இந்துக்களில், இதுவரை அதிகாரத்தில் அமராத சமூகங்களை பாஜக குறிவைக்கிறது. அம்மாநிலங்களில் யாதவ்- ஜாதவ் இல்லாத வாக்காளர்கள் குறித்த புதிய அக்கறைகளை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது. யாதவ், ஜாதவ் போன்ற இந்து சமூகங்களைத்தான் அரசியல் போட்டியாளராக குறிவைக்கிறது.
இந்த போக்கை, இதர மாநிலங்களிலும் நாம் காண முடியும். 2014 பாஜகவின் அரசியலுக்குப் பிறகு தான், மகாராஷ்டிராவில் மராத்தா, குஜராத்தில் படிதார், ஹரியானாவில் ஜாட், உத்தரபிரதேசம், பீகாரில் யாதவர்கள், அஸ்ஸாமில் அஹோம் ஆகியோரின் முக்கியத்துவம் குறைந்து வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் அரசியல் ரீதியாக வேரூன்றிய பத்ரலோக் கலாச்சாரத்திற்கு எதிராக ஓபிசிக்களையும், தலித் மக்களையும் திரட்டி வருகிறது.
ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக உள்ள கட்சிகள் தங்களுடைய அரசியலின் மூலம் பலதரப்பட்ட மக்கள் விடுதலைக்காகச் செயலாற்ற வேண்டும் என்ற கருத்து சமூக ஆர்வலர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இருக்கிறது. ஆனால் பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய காட்சிகள் ஆரம்பகாலம் தொட்டு இதற்கு எதிர்நிலையிலேயே இருந்து வருகின்றன. இந்த வாய்ப்பைத் தான் பாஜக தற்போது பயன்படுத்தி வருகிறது.
இந்திய அரசியல் தேர்தல் களம்:
‘தீவிர இந்துத்துவா’ என்ற அரசியல் நிலைப்பாடு காரணமாக, இஸ்லாமியர்களோடு பாஜக இணக்கமாக இல்லை , முரண்பட்டு நிற்கிறது என்று ஓரளவுக்கு மக்கள் மனதில் எதிர்க்கட்சிகள் பதிய வைத்துள்ளன. ஆனால், உண்மை என்னவெனில் பாஜக பெரும்பாலான இந்து சமூகங்களுடனும் கூட இணக்கமாக செயல்பட முடியாத சூழ்நிலையில்தான் உள்ளது. ‘இந்து தேசியம்’ இந்தியாவில் எழுச்சி பெற்று வருகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ஒட்டுமொத்த இந்து சமூகங்களும் பாஜகவோடு கைகோர்த்து விட்டன, இந்த 2024 மக்களவைத் தேர்தல் நிச்சயக்கப்பட்ட ஒன்றாக உள்ளது எனக் கூறுவது தவறானதாகும்.
இந்திய அரசியல் தேர்தல் களம் என்பது எப்போதும் பல்திறப்பட்டதும், பன்முகமானதும், பல்வேறு கூறுகளுக்கு இடமளிப்பதாகவும் இருந்து வருகிறது. பலநூற்றாண்டு காலமாகவே, இந்தியாவில் மதம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த அரசியல் ஆதாரமாக இருந்து வருகிறது. ஆனால், அதை மொத்தமாக பாஜக தன் கையில் எடுத்துக் கொண்டுவிட்டது என்று வாதாடுவது அபத்தமானதாகும். அந்தந்த மாநிலங்களில் உள்ள அரசியல் ஆதிக்கம் கொண்ட இந்து சமூகங்களை ஓரங்கட்டி விட்டு தான் பாஜக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
