Last Updated:
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடருக்காக சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிக்கு பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமதுவை அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் ஏலத்தில் எடுத்துள்ளார். இந்த சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ‘தி ஹண்ட்ரட்’ 2026 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் லண்டனில் உள்ள பிக்காடிலி லைட்ஸ் பகுதியில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த ஏலத்தில் பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமதுவை, இந்திய நிறுவனமான சன் குழுமத்திற்குச் சொந்தமான ‘சன்ரைசர்ஸ் லீட்ஸ்’ (Sunrisers Leeds) அணி சுமார் ரூ. 2.34 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.
இந்திய உரிமையாளர்களைக் கொண்ட ஒரு அணி பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுப்பது பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் நடந்துள்ளது. இதே ஏலத்தில் மற்றொரு பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரான உஸ்மான் தாரிக், பர்மிங்காம் பீனிக்ஸ் அணியால் சுமார் ரூ.1.72 கோடிக்கு வாங்கப்பட்டார்.
‘தி ஹண்ட்ரட்’ என்பது டி20 போட்டிகளை விடவும் வேகமான, 100 பந்துகள் மட்டுமே கொண்ட ஒரு புதிய கிரிக்கெட் வடிவமாகும். இதில் 6 பந்துகள் கொண்ட ‘ஓவர்’ முறை கிடையாது; மாறாக, ஒரு பந்துவீச்சாளர் தொடர்ந்து 5 அல்லது 10 பந்துகளை வீசலாம். ஒரு இன்னிங்ஸில் மொத்தம் 100 பந்துகள் மட்டுமே வீசப்படும் என்பதால் போட்டிகள் இரண்டரை மணி நேரத்திற்குள் முடிந்துவிடும்.
நடப்பு ஆண்டு முதல் இந்தத் தொடரில் ஐபிஎல் பாணியிலான ஏல முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அப்ரார் அகமதுவின் தேர்விற்குச் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Abrar Ahmed who constantly mocks India and posts stories against India has been bought by SRH in The Hundred league
If Knight Riders franchise had done the same the outrage would have been on a completely different level pic.twitter.com/utWj139mBw
— Ashish Shrivastava (@ashishayush1177) March 12, 2026
குறிப்பாக, அவர் கடந்த காலங்களில் இந்தியாவிற்கு எதிராகத் தெரிவித்த சில கருத்துக்களால் அதிருப்தியடைந்த ரசிகர்கள்,
இந்திய உரிமையாளர்கள் அவருக்குக் கோடிக்கணக்கான ரூபாய் வழங்குவதைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


