Last Updated:
பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, பாகிஸ்தான் எஃப்எம் வானொலி நிலையங்கள் இந்திய பாடல்களை ஒலிபரப்புவதை நிறுத்தியுள்ளன. PBA-வின் தேசபக்தி செயலை பாகிஸ்தான் அரசு பாராட்டியுள்ளது.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் எப்போதும் வேண்டுமானாலும் பதிலடி தரப்படலாம் அல்லது போர் மூளலாம் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த எஃப்எம் வானொலி நிலையங்கள் வியாழக்கிழமை முதல் இந்திய பாடல்களை ஒலிபரப்புவதை நிறுத்தி உள்ளன.
“பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் (PBA) நாடு முழுவதும் உள்ள பாகிஸ்தான் எஃப்எம் வானொலி நிலையங்களில் இருந்து இந்திய பாடல்களை ஒலிபரப்புவதை உடனடியாக நிறுத்தியுள்ளது” என்று PBA பொது செயலாளர் ஷகீல் மசூத் தகவல் தெரிவித்து உள்ளார். பாகிஸ்தான் மக்களிடையே இந்திய பாடல்கள் குறிப்பாக பிரபல பின்னணி பாடகர்களான லதா மங்கேஷ்கர், முகமது ரஃபி, கிஷோர் குமார் மற்றும் முகேஷ் போன்ற ஜாம்பவான்களின் பாடல்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. இதனால் பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பெரும்பாலான எஃப்எம் வானொலி நிலையங்கள் தினமும் இவர்கள் பாடிய பாடல்களை அதாவது இந்திய பாடல்களை ஒலிபரப்புகின்றன.
இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழலை கருத்தில் கொண்டு, பாகிஸ்தானின் அனைத்து எஃப்எம் வானொலி நிலையங்களிலும் இந்திய பாடல்களை ஒலிபரப்புவதை உடனடியாக நிறுத்த PBA-க்கு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளதாக ஊகங்கள் எழுந்த நிலையில், பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அட்டா தரார், PBA எடுத்துள்ள இந்த முடிவை பாராட்டி உள்ளார்.
பாகிஸ்தான் அமைச்சர் அட்டா தரார் எழுதியுள்ள கடிதம் ஒன்றில், PBA-வின் தேசபக்தி செயல் மிகவும் பாராட்டத்தக்கது. இந்திய பாடல்களை ஒலிபரப்புவதை நிறுத்தி முழு தேசத்தின் கூட்டு உணர்வையும் PBA பிரதிபலித்துள்ளது” என்று கூறி உள்ளார். மேலும் அந்த கடிதத்தில், ‘பாகிஸ்தானின் எஃப்எம் நிலையங்களில் இந்திய பாடல்களை ஒலிபரப்ப தடை செய்வது என்பது “இதுபோன்ற சோதனையான காலங்களில் தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதில் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒரேபக்கம் நிற்கிறோம் என்பதைக் காட்டுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேரை சுட்டு கொன்றதை அடுத்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளதாக கருதும் இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்த நிறுத்தம், அட்டாரியில் உள்ள நில எல்லையை மூடுதல் மற்றும் ராஜாங்க ரீதியிலான உறவுகளை குறைத்தல் உள்ளிட்ட பல பதிலடி நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அறிவித்து செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. பதிலடியின் ஒருபகுதியாக சமீபத்தில் பாகிஸ்தான் விமான நிறுவனங்களால் இயக்கப்படும் விமானங்களுக்கான தனது வான்வெளியை இந்தியா மூடியது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் வானொலி நிலையங்களில் இந்திய பாடல்களுக்கு தடை… தேசபக்தியை பாராட்டிய பாகிஸ்தான் அரசு!


