Last Updated:
பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி ஹாசிம் மூஸா மூளையாக செயல்பட்டது விசாரணையில் உறுதியாகியுள்ளது.
காஷ்மீரில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு விளங்குகிறது. அங்கு கடந்த 22 ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அப்பாவிகள் கொல்லப்பட்ட சம்பவம் குலைநடுக்க வைத்தது.
இந்த தாக்குதல் தொடர்பாக என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி ஹாசிம் மூஸா மூளையாக செயல்பட்டது விசாரணையில் உறுதியாகியுள்ளது.
இவர் பாகிஸ்தான் ராணுவத்தில் எஸ்.எஸ்.ஜி. எனப்படும் சிறப்பு சேவைகள் குழுவின் பரா கமாண்டோவாக பணியாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு பிரிவான எஸ்.எஸ்.ஜி.-யில் வழக்கத்திற்கு மாறான போர் திறமை மற்றும் ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட தீவிர பயிற்சி அளிக்கப்படும்.
நவீன ஆயுதங்களை கையாளுவதுடன், தற்காப்புக் கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர்களாக எஸ்.எஸ்.ஜி. வீரர்கள் உருவாக்கப்படுவார்கள். இதுபோன்ற தீவிர பயிற்சி பெற்ற ஹாசிம் மூஸாவைத் தான், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பிற்கு பாகிஸ்தான் ராணுவம் அனுப்பியதாக கூறப்படுகிறது.
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் காஷ்மீரை சேர்ந்த 15 பேரை பிடித்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் தான் ஹாசிம் மூஸா, பாகிஸ்தானின் துணை ராணுவப்படையில் பணியாற்றியவர் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு, லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய TRF அமைப்பு பொறுப்பேற்றது. ஆனால், இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் அரசு வாண்டடாக வந்து விளக்கம் கொடுத்தது.
இந்த நிலையில், ஹாசிம் மூஸா மூலம் பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதனிடையே பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் ஏப்ரல் முதல் வாரத்திலேயே பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் முகாமிட்டது தெரியவந்துள்ளது.
சம்பவத்து அன்று தாக்குதல் நடத்துவதற்கு முன்பு அங்குள்ள உணவகத்தில் தீவிரவாதிகள் இருவர் காத்திருந்துள்ளனர். அப்போது அங்கு சாப்பிட வந்த சுற்றுலாப் பயணிகளிடம் மதம் குறித்து விசாரித்த பிறகு துப்பாக்கிச் சூடு நடத்தியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீரில் உள்ள 87 சுற்றுலாத் தலங்களில் 48 இடங்கள் மூடப்பட்டுள்ளன.
April 29, 2025 7:38 PM IST


