Cricket
oi-Yogeshwaran Moorthi
பர்மிங்ஹம்: மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடரில், கிரிக்கெட் உலகின் பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய அனல் பறக்கும் லீக் ஆட்டம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த விறுவிறுப்பான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திரத் தொடக்க ஆட்டக்காரரும், துணைக் கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து, வெறும் 34 பந்துகளில் அதிரடி அரைசதம் கடந்து மாஸ் காட்டியுள்ளார்.
ஆரம்பத்தில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தவித்த போது, பொறுப்புடன் ஆடிய மந்தனா பின்னர் அதிரடிக்கு மாறி இந்திய அணியை வலுவான நிலைக்குக் கொண்டு சென்றார். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யக் களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

பாகிஸ்தான் அணியின் துல்லியமான பந்துவீச்சால் இந்திய அணியின் ஷபாலி வர்மா, ஜெமீமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் நங்கூரம் போல நிலைத்து நின்ற ஸ்மிருதி மந்தனா, பந்துவீச்சாளர்களின் உத்திகளைத் துல்லியமாகக் கணித்து விளையாடினார்.
மைதானத்தில் செட்டிலான பிறகு தனது அசுர வேக ஆட்டத்தை வெளிப்படுத்திய மந்தனா, பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களின் ஓவர்களில் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் பந்துகளைத் தெறிக்கவிட்ட அவர், வெறும் 34 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டி மிரட்டினார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த இக்கட்டான சூழலில் ஸ்மிருதி மந்தனா அடித்த இந்த அதிவேக அரைசதம், உலகக் கோப்பை வரலாற்றில் அவரது மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான இந்திய ரசிகர்கள் எழுப்பிய கோஷங்களுக்கு மத்தியில், மந்தனா தனது பேட்டை உயர்த்தி அரைசதத்தைக் கொண்டாடிய தருணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
சிறப்பாக ஆடிய ஸ்மிருதி மந்தனா, 44 பந்துகளில் 2 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் இந்திய அணியின் ரிச்சா கோஷ் அதிரடியில் விளாசி தள்ளினார். கடைசி நேரத்தில் களமிறங்கிய ரிச்சா கோஷ், 17 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்களை குவித்துள்ளது.

