Last Updated:
பாகிஸ்தான் தூதரக அதிகாரியுடன் நெருக்கம் கொண்ட யூடியூபர் ஜோதி உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கடந்த 13ஆம் தேதி டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்து அஹ்சன் – உர் – ரஹீம் எனும் டேனிஷை இந்தியாவிட்டு வெளியேற வெளியுறவுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதேசமயம், பஞ்சாப் காவல்துறையினர் உளவு பார்த்த குற்றச்சாட்டில் இருவரை கைது செய்தனர். அவர்களுக்கும் டேனிஷுக்கும் இடையே பணப் பரிவர்தனை நடந்ததையும் போலீஸார் உறுதி செய்திருந்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தற்போது பெரும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக பஞ்சாப்பில் கைது செய்யப்பட்ட இருவர் உட்பட இந்த விவகாரத்தில் மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், தற்போது ஹரியானாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்லோத்ரா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஆறு பேரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஜோதி ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர், பயணம் தொடர்பான ஒரு யூடியூப் சேனலை நடத்திவருகிறார். கடந்த 2023ஆம் ஆண்டு இவர், பாகிஸ்தானுக்கு சென்றுவந்துள்ளார். அப்போது விசா நடைமுறைக்காக பாகிஸ்தான் தூதரகத்திற்கு சென்றபோது, அவருக்கும் டேனிஷுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது.
பின் அவருடன் வாட்ஸ்-அப், டெலிகிராம் மற்றும் ஸ்னாப் சாட் உள்ளிட்ட செயலிகள் மூலம் தொடர்ந்து பேசி அவருடன் நெருக்கமாக பழகியுள்ளார். மேலும், இந்தியாவில் இருக்கும் இடங்கள் குறித்த தகவல்களை கொடுத்ததாகவும், சமூகவலைதளங்கள் மூலம் பாகிஸ்தான் குறித்த நேர்மறையான கருத்துகளை பிரதிபலிக்க உதவியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது.
ஜோதி பாகிஸ்தான் பயணத்தின் போது அங்கு தங்குவதற்கு டேனிஷ் உதவியதாகவும், பிறகு அலி என்பவரின் மூலம் உளவுத்துறை அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியதாகவும் தெரியவந்துள்ளது. தற்போது ஜோதி மீது பிஎன்எஸ் 152, அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம் 1923ன் பிரிவுகள் 3,4 மற்றும் 5 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ஜோதி தற்போது ஐந்து நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கைம்பெண் குசாலா (32) என்பவரும் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி விசா விவகாரங்களுக்காக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு டேனிஷுடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் தொடர்ந்து பேசிவந்துள்ளார். இவர்கள் இருவரும் வாட்ஸ்-அப் காலில் பேசிவர, திடீரென டேனிஷ், குசாலாவை டெலிகிராம் மூலம் பேசலாம் அதுதான் பாதுகாப்பானது என வற்புறுத்தி சொல்லியுள்ளார். மேலும், அவரைத் திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்து அவருடன் வீடியோ காலிலும் பேசிவந்துள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோக டேனிஷுக்கும், குசாலாவுக்கும் இடையே அடிக்கடி பணப் பரிவர்தனையும் நடந்திருப்பதையும் போலீஸார் கண்டறிந்துள்ளனர்.

