Last Updated:
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பணியாற்றுவதற்கு ஐசிசி தற்போது நடுவர்களை தேர்வு செய்துள்ளது. மொத்தம் 15 நடுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 12 பேர் ஆடுகளத்தில் பணியாற்றுவார்கள்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் இம்மாதம் 19ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியாவைச் சேர்ந்த நடுவர் நிதின் மேனன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் பொறுப்பு பாகிஸ்தான் வசம் ஐசிசி ஒப்படைத்திருந்தது. இந்த தொடரில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாது என ஐசிசி-யிடம் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படுகின்றன. வரும் 19ஆம் தேதி தொடங்க உள்ள இந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 8 அணிகள் மோதகின்றன.
8 அணிகளும் ஏ மற்றும் பி பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. மற்ற அணிகள் பி பிரிவில் உள்ளன.
வரும் 19ஆம் தேதி கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பணியாற்றுவதற்கு ஐசிசி தற்போது நடுவர்களை தேர்வு செய்துள்ளது. மொத்தம் 15 நடுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 12 பேர் ஆடுகளத்தில் பணியாற்றுவார்கள்.
3 பேர் போட்டி நடுவர்களாக பணியாற்றுவார்கள். இந்த குழுவில் முன்னணி நடுவரான இந்தியாவைச் சேர்ந்த நிதின் மேனன் இடம்பெற வேண்டும் என ஐசிசி விருப்பம் தெரிவித்திருந்தது. ஆனால் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறுவதால் பாதுகாப்பு நலன் கருதி இந்த தொடரில் பங்கேற்பதில்லை என நிதின் மேனன் முடிவு செய்துள்ளார்.
அவரது முடிவை ஐசிசி ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கிடையே பாகிஸ்தானில் உள்ள மைதானங்கள் விளையாடுவதற்கு இன்னும் தகுதி பெறாமல் இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
February 06, 2025 2:22 PM IST


