இதன்படி, இந்தியாவில் இருந்த பாகிஸ்தானியர்கள் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் வெளியேறினார்கள். இதில், பல இடங்களில், தங்கள் கணவர்களையும், குழந்தைகளையும், குடும்பத்தை விட்டும் பிரிந்த கதைகள் எல்லாம் வெளியே வந்தன.
அப்படி, ரக்ஷந்தா ரஷித் (63) என்ற பெண்மணியும் தனது இரு பிள்ளைகளையும், கணவரையும் விட்டு பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டார். கடந்த 38 ஆண்டுகளாக நீண்ட கால விசா அடிப்படையில் இந்தியாவில் இருந்த பெண் குடியுரிமை கேட்டு முறையிட்டுள்ளார். ஆனால், அவருக்கு கிடைக்காமல் இருந்தது. இது தொடர்பாக அவர் ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு ஏப்ரல் 30 ஆம் தேதி, அதாவது இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்ற மத்திய அரசு நிர்ணயித்த இறுதி தேதியில் அவரது வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. ஆனால், அதற்குள்ளாக அவர் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.
இதனையடுத்து அவரது மகள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில், தனது தாய்க்கு பாகிஸ்தானில் யாரும் சொந்தங்கள் கிடையாது என்றும், அவர் அங்கு ஆதரவற்றவராக இருக்கிறார் என்றும், அவருக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினை இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்ற நீதிபதி ராகுல் பாரதி, கடந்த 6 ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளித்தார்.
அந்தத் தீர்ப்பில், பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட பெண் அடுத்த 10 நாட்களுக்குள் இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பான அறிக்கையை ஜூலை 1 ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மத்திய அரசு இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Jammu and Kashmir
June 25, 2025 9:11 PM IST

