Last Updated:
புவிசார் அரசியல் காரணங்களால் ஒரு பெரிய முதலீட்டாளர் வெளியேற முற்படுவது பாகிஸ்தான் பொருளாதாரத்தில் ஒருவித அதிர்வை ஏற்படுத்தியுள்ளது
ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான எடிசலாட், பாகிஸ்தான் சந்தையிலிருந்து வெளியேறுவது குறித்து ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய கிழக்கின் முன்னணித் தொலைத்தொடர்பு நிறுவனமான எடிசலாட், பாகிஸ்தான் டெலிகாம் நிறுவனத்தில் (PTCL) தனக்குள்ள பங்குகளைத் திரும்பப் பெறுவது குறித்து மறுபரிசீலனை செய்து வருவதாக டான் (Dawn) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை, பிராந்திய புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் முதலீட்டு உத்திகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவையே இந்த முடிவுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
2005-ஆம் ஆண்டு, பாகிஸ்தான் டெலிகாம் நிறுவனத்தின் (PTCL) 26 சதவீத பங்குகளை நிர்வாகக் கட்டுப்பாட்டுடன் 2.6 பில்லியன் டாலர் மதிப்பிற்கு எடிசலாட் வாங்கியது. தற்போது நிலவும் சூழலில், வளைகுடா முதலீட்டாளர்கள் பல நாடுகளில் மேற்கொண்டு வரும் ‘முதலீட்டு மறுசீரமைப்பு’ நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் அரசு மற்றும் அதன் நிறுவனங்கள் பிடிசிஎல்-இல் 62 சதவீத பங்குகளை வைத்துள்ளன. எடிசலாட் நிறுவனம் 26 சதவீத பங்குகளையும், மீதமுள்ள 12 சதவீத பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களும் வைத்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாகப் நஷ்டத்தைச் சந்தித்து வந்த பிடிசிஎல் நிறுவனம், சமீபத்தில் ‘டெலிநார் பாகிஸ்தான்’ நிறுவனத்தைக் கையகப்படுத்திய பிறகு மீண்டும் லாபப் பாதைக்குத் திரும்பியுள்ளது.
எடிசலாட் வெளியேறுவது குறித்த செய்திகள் இன்னும் ஆரம்பகட்ட ஆய்விலேயே உள்ளது. இது குறித்து எடிசலாட் அல்லது பாகிஸ்தான் நிதி அமைச்சகம் இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனினும், புவிசார் அரசியல் காரணங்களால் ஒரு பெரிய முதலீட்டாளர் வெளியேற முற்படுவது பாகிஸ்தான் பொருளாதாரத்தில் ஒருவித அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி! வெளியேறும் முன்னணி அமீரக டெலிகாம் நிறுவனம்: என்ன காரணம்?


