ஆப்பிரிக்க நாடான சோமாலியா, பாகிஸ்தானிடமிருந்து ஜே.எஃப்-17 தண்டர் (JF-17 Thunder) ரகப் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
சோமாலிய விமானப்படைத் தலைமைத் தளபதி முகமது ஷேக் அலி கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்திருந்தார்.
இந்தநிலையில், அங்கு பாகிஸ்தானின் ஜே.எஃப்-17 தண்டர் பிளாக்-3 போர் விமானங்களை வாங்குவது குறித்து விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன.
போர் விமானங்கள்
இதன் தொடர்ச்சியாக, சோமாலியாவுக்கு 24 அதிநவீன போர் விமானங்களை வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இதற்கான 90 கோடி டொலர் மதிப்பிலான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா மற்றும் பாகிஸ்தான் கூட்டுத் தயாரிப்பான இந்த ஜே.எஃப்-17 தண்டர் விமானங்கள், கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் சண்டையில் திறம்படச் செயல்பட்டதாகப் பாகிஸ்தான் பெருமையுடன் சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், இந்த விமானங்களின் தொழில்நுட்பத் திறன் மற்றும் நம்பகத்தன்மை குறித்த முழுமையான விவரங்கள் இதுவரை பகிரங்கமாக வெளியிடப்படவில்லை.
பெரிய தொகை
அத்தோடு, சோமாலியா இவ்வளவு பெரிய தொகையில் ஆயுதங்களை வாங்க முற்படுவது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில், அந்நாட்டில் நிலவும் கடும் வறட்சி மற்றும் தொடர் மோதல்கள் காரணமாகச் சுமார் 44 லட்சம் மக்கள் உணவின்றித் தவிப்பதாகவும், அவர்களில் 10 லட்சம் மக்கள் ஒருவேளை உணவுக்கே வழியின்றி உயிர் பிழைக்கப் போராடி வருவதாகவும் ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.
இத்தகைய மனிதாபிமான நெருக்கடிக்கு மத்தியில் சோமாலியா எடுத்துள்ள இந்த இராணுவ நடவடிக்கை சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

