மொகதிசு,சீனாவின் அரசு நிறுவனமான செஷ்ண்டு விமான தயாரிப்பு நிறுவனமும், பாகிஸ்தானின் அரசு நிறுவனமான பாகிஸ்தான் ஏரோநாட்டிகல் காம்பிளஸ் நிறுவனமும் இணைந்து ஜேஎப்-17 தண்டர்பிளாக் 3 என்ற இலகு ரக போர் விமானங்களை உருவாகியுள்ளன.
இந்த வகை போர் விமானங்களை இந்தியாவுக்கு எதிரான மோதலின்போது பயன்படுத்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானிடமிருந்து 24 ஜேஎப்-17 தண்டர்பிளாக் 3 ரக போர் விமானங்களை வாங்க சோமாலியா முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி, இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரம் கோடிக்கு பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்களை வாங்க சோமாலியா முடிவு செய்துள்ளது. இதற்கான இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் சோமாலியா விமானப்படை தளபதி முகமது ஷேக் அலி பாகிஸ்தான் சென்றிருந்தார். அப்போதே, போர் விமானங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை முக்கியகட்டத்தை எட்டியதாக தகவல் வெளியானது.
இந்த ஒப்பந்தம் எட்டப்படும் பட்சத்தில் பனிப்போர் காலத்திற்குப்பின் சோமாலியா பாதுகாப்புத்துறையில் மிகப்பெரிய அளவில் போர் விமானங்களை வாங்குவது இதுவே முதல்முறை என்ற நிலையை அடையும். சோமாலியா போர் விமானங்களை வாங்கும் பட்சத்தில் அது பாகிஸ்தான் ராணுவ தளவாட உற்பத்தித்துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது




