பஹாமாசில் சுற்றுலாவை முடித்துவிட்டு கடந்த திங்கட்கிழமை மதியம் அந்நாட்டின் அண்ட்ரோஸ் தீவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து மரியோ லமர் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சிறிய ரக தனி விமானத்தில் புறப்பட்டனர். பஹாமாசின் அண்ட்ரோஸ் தீவில் இருந்து புளோரிடாவின் மையாமி நகருக்கு புறப்பட்டுள்ளனர். விமானத்தை மரியோ லமர் இயக்கினார்.
விமான விபத்து – 4 பேர் பலி
அண்ட்ரோஸ் தீவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் 13 கிலோ மீட்டர் தொலைவில் பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து நடுக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த மரியோ லமர் , அவரது மனைவி லில்லி லமர், பேரப்பிள்ளைகள் சோபி சோசா (வயது 28) , கிறிஸ்டின் சோசா (வயது 22) என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் உயிரிழந்தனர்
இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் கடலில் விழுந்த விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், மோசமான வானிலை காரணமாக மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தீவிர தேடுதல் வேட்டையில் 4 பேரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விமான விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
