Last Updated:
பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் சைபர் குழுக்கள் இந்திய ராணுவத்தை குறிவைத்து ஹேக்கிங் முயற்சிகள் மேற்கொண்டது அம்பலமாகியுள்ளது. Armoured Vehicle Nigam Limited வலைதளம் ஆஃப்லைனுக்கு மாற்றப்பட்டது.
பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் சைபர் குழுக்கள் இந்திய ராணுவத்தை குறிவைத்து ஹேக்கிங் முயற்சிகளை மேற்கொண்டது அம்பலமாகியுள்ளது.
பஹல்காம் தாக்குதல் பதற்றத்திற்கு மத்தியில், பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் சைபர் குழுக்கள் பல இந்திய ராணுவ வலைதளங்களை குறிவைத்துள்ளன. அதன்படி, இந்திய பாதுகாப்பு அதிகாரிகளின் Login தரவுகள் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் சைபர் தாக்குதலில் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ‘பாகிஸ்தான் சைபர் ஃபோர்ஸ்’ என்ற ID மூலம், இந்தியாவின் ராணுவப் பொறியாளர் சேவைகள், மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தின் முக்கியமான தரவுகளை ஹேக் செய்ய அணுகியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான Armoured Vehicle Nigam Limited நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை ஹேக் செய்ய முயன்றதாகவும், சைபர் குழுவின் X பக்கத்தில் பாகிஸ்தான் கொடி, Armoured Vehicle Nigam Limited நிறுவன வலைதளத்தின் Screenshot பகிரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக Armoured Vehicle Nigam Limited நிறுவனத்தின் வலைதளம் ஆஃப்லைனுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், சைபர் தாக்குதல்களைக் கண்டறிய சைபர் பாதுகாப்பு நிபுணர்களும், நிறுவனங்களும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையே, பாதுகாப்பு தொடர்பாக மாநிலங்களுடன் மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலை 10.45 மணியளவில் மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. காணொளி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில், மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், காவல்துறை தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.
இதனிடையே, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, இந்திய கடற்படையுடன் இணைந்து கடலுக்கு அடியில் போர் திறனை வலுப்படுத்தும் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், பஹல்காம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் ரியாஸ் அகமது, அனந்த்நாக் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரோடு மேலும் 5 போலீசாரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


