ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் சமயத்தில், காஷ்மீரின் பிரபல சுற்றுலாத்தலமான பஹல்காமின் பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப்பயணிகள் ரசித்து மகிழ்ந்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென கைகளில் துப்பாக்கியுடன் அங்கு வந்த நான்கு பயங்கரவாதிகள், ஆண்களை குறிவைத்து சுட்டனர். இதில், மொத்தம் 25 சுற்றுலாப்பயணிகள் பரிதாபமாக பலியாகினர். இந்தத் தாக்குதலை தடுக்க முயன்ற காஷ்மீரின் குதிரையோட்டி ஒருவரும் பரிதாபமாக பலியாகினர். இதன் மூலம் பஹல்காம் தாக்குதலில் மொத்தம் 26 நபர்கள் பரிதாபமாக பலியாகினர்.
இதனையடுத்து உடனடியாக பாகிஸ்தான் மீது இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில் மிக முக்கியமானது: 1960 சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, சார்க் திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசா ரத்து, தூதரக அதிகாரிகள் வெளியேற்றம். மேலும், அட்டாரி – வாகா உள்பட பாகிஸ்தானுடன் தொடர்புடைய அனைத்து சர்வதேச எல்லைகளும் மூடப்பட்டது உள்ளிட்டவை அடங்கும்.
ஒரு பக்கம் ராஜாங்க ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு, மறுபக்கம் பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கவும் இந்தியா தயாரானது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் தொடர்ந்து ராணுவ அதிகாரிகள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் போர் ஒத்திகையை மத்திய அரசு அறிவித்தது. பின்னர் மே 7ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 9 பயங்கரவாத நிலையங்களை குறிவைத்து இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது. இதில், அந்த 9 பயங்கரவாத நிலைகளும் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடத்திய கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் கொடுத்தனர்.
அந்த விளக்கத்தில், இந்திய ராணுவம், பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத நிலைகள் மீது ஆபரேஷன் சிந்தூர் மூலம் துல்லிய தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானில் இருந்த 9 பயங்கரவாத நிலைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய எல்லை கிராமங்களில் பாகிஸ்தான் ட்ரோன், சிறிய ரக ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியது. அவற்றை இந்திய ராணுவம் வானத்திலேயே தடுத்து நிறுத்தி அழித்தது எனத் தெரிவித்தனர்.
இரு நாட்டிற்கும் இடையே போர் பதற்றம் உருவான நிலையில், பின்னர் இரு நாடுகளும் 10ஆம் தேதி சண்டை நிறுத்தத்தை அமல்படுத்தின. இந்தச் சண்டை நிறுத்தத்தை முதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன. மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தகத்தை வைத்து இந்தச் சண்டை நிறுத்தத்தை கொண்டுவந்ததாகவும், உலகிலேயே வர்த்தகத்தைக் கொண்டு போரை நிறுத்தியது தான் என்றும் பேசிவந்தார்.
இதற்கு இந்தியா தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு, பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலேயே சண்டை நிறுத்தம் மேற்கொண்டதாகவும் விளக்கம் கொடுத்தது.
எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும், சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும் என வலியுறுத்திவந்தன. இறுதியாக ஜூலை 28ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடரில் பிரதமர் மோடி இது குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.
அதேசமயம் அன்றைய தினமே அதிகாலையில் தாச்சிகாம் வனப்பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் மஹாதேவ் மூலம், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட ஹாஷிம் மூசா உள்ளிட்ட மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர், ஆப்ரேஷன் மஹாதேவ் நடவடிக்கைகள் நிறைவடைந்திருந்த நிலையில், டெல்லி, செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் கேட் 1 அருகே நவம்பர் மாதம் 10ஆம் தேதி மாலை 6.50 மணிக்கு கார் வெடிகுண்டு வெடிக்கவைக்கப்பட்டு, பெரும் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதில், 13 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இந்தத் தீவிரவாத தாக்குதல் வழக்கை என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது. இந்தத் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையதாக ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழக வளாகத்திலும், பிற இடங்களிலும் விசாரணை நடத்தப்பட்டது. இதில், முக்கிய குற்றவாளிகளான டாக்டர் முசம்மில் ஷகீல் கனி மற்றும் டாக்டர் ஷாஹீன் சயீத் ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்தத் தீவிரவாத தாக்குதலில் இதுவரை என்.ஐ.ஏ. ஒன்பது பேரை கைது செய்து விசாரணை நடத்திவருகிறது.
ஆப்ரேஷன் சிந்தூரில் முக்கிய பங்காற்றிய பைலட்கள் உட்பட ஒன்பது இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கு மூன்றாவது மிக உயர்ந்த வீரதீர விருதான வீர சக்கரா விருது வழங்கப்பட்டது. மேலும், 26 பேருக்கு வாயு சேனா பதக்கம் வழங்கப்பட்டது. இந்த விருதுகள் 2025ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் வீரர்களுக்கு வழங்கப்பட்டது. அதேபோல், டிசம்பர் 26ஆம் தேதி நடந்த பிரதமரின் தேசிய பாலர் விருது நிகழ்ச்சியில், ஆப்ரேஷன் சிந்தூரின்போது, இந்திய ராணுவ வீரர்களுக்கு உதவிய சிறுவனுக்கு விருது வழங்கப்பட்டது.
பஹல்காம் தாக்குதல் முதல் டெல்லி கார் குண்டு வெடிப்பு… 2025-ல் இந்தியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்கள்!

