Last Updated:
பஹல்காம் சம்பவத்தில் மனித உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது மற்றும் இது மிகவும் துயரமான சம்பவம் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் மிகவும் கவலை அளிக்க கூடியது மற்றும் துயரமானது என்று குறிப்பிட்டு இவ்விவகாரத்தில் “இந்தியா பொறுப்புடன் செயல்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் வழக்கில் பதவி இழந்து சிறை தண்டனை அனுபவித்து வரும் இம்ரான் கான், தனது எக்ஸ் தளத்தின் மூலம் இது குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார். “பஹல்காம் சம்பவத்தில் மனித உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது மற்றும் இது மிகவும் துயரமான சம்பவம். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக” கூறியுள்ளார்.
அமைதியே நமது முன்னுரிமை, ஆனால் அதை கோழைத்தனம் என்று தவறாக எண்ணக்கூடாது. 2019ம் ஆண்டில் முழு தேசத்தின் ஆதரவுடன் எனது தலைமையிலான அரசாங்கம் செய்ததைப் போல, இந்தியாவின் எந்தவொரு நடவடிக்கைக்கும் தகுந்த பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு அனைத்து திறன்களும் உள்ளன. 2019-ல் நான் கணித்தது போல, பஹல்காம் சம்பவத்திற்குப் பிறகு மீண்டும் அதேதான் நடக்கிறது. சுய பரிசோதனை மற்றும் விசாரணைக்கு பதிலாக, இந்தியா மீண்டும் பாகிஸ்தான் மீது பழியை சுமத்துகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களால் உத்தரவாதம் அளிக்கப்பட்டபடி, காஷ்மீரிகளின் சுய நிர்ணய உரிமையின் முக்கியத்துவத்தை நான் எப்போதும் வலியுறுத்தி வருகிறேன்” என கூறி உள்ளார்.
“அரசியல் ரீதியாக பழிவாங்குவதில்தான் தற்போது பாகிஸ்தானின் அதிகபடியான கவனம் உள்ளது. பாகிஸ்தானின் உள் அரசியல் செயல்பாடுகள் நாட்டிற்குள் ஏற்கனவே இருக்கும் பிளவுகளை தீவிரப்படுத்துகிறது. வெளியிலிருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் இஸ்லாமாபாத்தின் திறனை குறைத்து மதிப்பிட இவை காரணமாக உள்ளன” என்று கூறி இருக்கிறார். “நவாஸ் ஷெரீப் மற்றும் ஆசிப் சர்தாரி போன்ற சுயநலவாதிகளிடமிருந்து எந்தவொரு வலுவான நிலைப்பாடு வரும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம். இவர்களின் சட்டவிரோத செல்வமும், வணிக நலன்களும் வெளிநாடுகளில் இருப்பதால் அவர்கள் ஒருபோதும் இந்தியாவுக்கு எதிராக பேச மாட்டார்கள்.
இவர்கள் வெளிநாட்டு முதலீடுகளிலிருந்து லாபம் ஈட்டுகிறார்கள். மேலும், அந்த நிதி நலன்களைப் பாதுகாக்க, பாகிஸ்தானுக்கு எதிரான வெளிநாட்டு ஆக்கிரமிப்பு மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிராக பதில் பேசாமல் அவர்கள் அமைதி காக்கிறார்கள். இவர்கள் எதற்காக பேச அச்சப்படுகிறார்கள் என்பதற்கான காரணம் மிக எளிமையானது.
இவர்கள் உண்மையைப் பேச துணிந்தால், இந்திய லாபிகள் அவர்களின் கடல் கடந்த சொத்துக்களை முடக்கிவிடுவார்கள்” என்று கூறி, தற்போதைய பாகிஸ்தான் ஆட்சியை இம்ரான் கான் கடுமையாக சாடி உள்ளார். கடந்த ஆகஸ்ட் 2023 முதல் சிறையில் இருக்கும் இம்ரான் கான், நாட்டை தாண்டிய எதிரிகளுக்கு எதிரான சூழ்ச்சிகள் மற்றும் போரில் வெற்றி பெற, முதலில் தேசம் ஒன்றுபட வேண்டும் என்று கூறியுள்ளார்.
“பஹல்காம் தாக்குதல் மிகவும் துயரமான சம்பவம்… இந்தியா பொறுப்புடன் செயல்பட வேண்டும்…!” பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான்


