Last Updated:
பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக இருந்த சைஃபுல்லா கசூர் பாகிஸ்தானில் பேரணியில் பங்கேற்ற வீடியோ வைரல். பாகிஸ்தான் அரசியல்வாதி மாலிக் அகமது கான், தல்ஹா சயீத் உடன் பங்கேற்பு.
தற்போது இந்த சைஃபுல்லா கசூர் பாகிஸ்தானின் பஞ்சாபில் நடந்த ஒரு பேரணியில் பங்கேற்றுப் பேசியிருக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே பாகிஸ்தான் மறைமுகமாக பயங்கரவாதத்திற்கு ஆதரவு தந்து வருகிறது எனும் கருத்து இருக்கும் வேளையில், அதனை பாகிஸ்தான் தீர்க்கமாக மறுத்து வருகிறது. ஆனால், லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய நபரான சைஃபுல்லா கசூர் தற்போது பாகிஸ்தானில் பொதுவெளியில் இப்படிப் பேரணியில் பங்கேற்றிருப்பது, பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு ஆதரவு தருவது வெளிச்சமாகிறது எனப் பேச்சுகள் எழுந்துள்ளன.
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் மேலும் அதிர்ச்சியளிக்கக் கூடிய இரு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று, பயங்கரவாதி சைஃபுல்லாவுடன் பாகிஸ்தான் அரசியல்வாதி மாலிக் அகமது கானும் அதில் பங்கேற்றதாகச் சில தகவல்கள் வருகின்றன. அதேபோல், அந்தப் பேரணிக்கு அந்நாட்டு ராணுவம் பாதுகாப்பு வழங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவற்றை விட மற்றொரு பெரும் அதிர்ச்சியும் அந்த வீடியோவில் இருக்கிறது. எல்.இ.டி. நிறுவனரும் மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவருமான ஹபீஸ் சயீத்தின் மகனான தல்ஹா சயீதும் பேரணியில் இருந்திருக்கிறார்.
வைரலாகும் வீடியோவில், சைஃபுல்லா காலித் இந்தியா, இந்துக்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகப் பேசியிருப்பதும் பதிவாகியுள்ளது. மேலும், அந்தப் பேரணியில் பேசும் சைஃபுல்லா, இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளை “தியாகிகள்” என்று குறிப்பிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
அந்தக் காணொளியில் அவர், “ஏப்ரல் 22 அன்று இந்தியாவில் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடந்ததாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இந்தியா என்னைத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் குறிப்பிட்டது என்று எனக்குத் தெரியவந்தது. நாங்கள் துப்பாக்கிச் சூடுகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளுக்குப் பயப்படப் போவதில்லை, நாங்கள் தியாகிகளாக இறக்க விரும்புகிறோம்” எனப் பேசியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி; இராணுவ பாதுகாப்புடன் பாகிஸ்தானில் இருக்கும் வீடியோ!


