இருபது ஓவர் உலகக் கோப்பை தொடரில் ஓமனுக்கு எதிரான போட்டியில், ஆஸ்திரேலிய அணி, 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அனுபவம் குறைந்த ஓமன் அணி பல முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவை பவுலிங்கில் திணறடித்தது.
தொடரின் 10ஆவது லீக் போட்டி கரீபியன் நாடான பார்படாஸில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் டேவிட் வார்னர் 56 ரன்களும், நடு வரிசையில் களமிறங்கிய ஸ்டாய்னிஸ், 67 ரன்களும் குவித்தனர்.
பின்னர் 165 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஓமன் அணி, சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்களை மட்டுமே அந்த அணி பெற்றது. இதனால் 39 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றியைப் பெற்றது. பேட்டிங்கில் மட்டுமல்லாது பந்துவீச்சிலும் கலக்கிய ஸ்டாய்னிஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
அனுபவம் குறைந்த ஓமன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 200 ரன்களுக்கும் அதிகமாக குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், ஓமன் அணியின் பவுலர்கள், ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர்.
குறிப்பாக அந்த அணியின் கேப்டன் அகிப் இல்யாஸ் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இன்னொரு பவுலரான ஷகீல் அகமது 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே அளித்தார். இதேபோன்று பேட்டிங்கிலும் ஓமன் அணி சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கூடுதலாக 40 ரன்கள் சேர்த்திருந்தால், ஜாம்பவான் அணியான ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருக்கும் என்பது கவனிக்கத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
