கோலாலம்பூர்:
மாணவர்களின் ஒழுக்கமின்மை, குறிப்பாகப் பள்ளிப் பகடிவதை சம்பவங்களை (bullying) கையாள்வதற்கான வழிகாட்டுதல்களைத் தெளிவுபடுத்த, கல்வி அமைச்சு 1996-ஆம் ஆண்டு கல்விச் சட்டத்தின் கீழ், பள்ளி ஒழுங்குமுறை விதிகளைத் திருத்துகிறது என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் (Fadhlina Sidek) இன்று மேலவையில் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, பள்ளிப் பகடிவதை சம்பவங்களை முழுமையாகவும், திறம்படவும் கையாள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
2023 ஆண்டின் தொடக்கத்திலிருந்து, மடானி அரசாங்கம், பள்ளிப் பகடிவதை தடுப்பு வழிகாட்டுதல்களை வலுப்படுத்தியுள்ளதாகவும், அவற்றின் அமலாக்கத்தை உறுதி செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும், பள்ளிப் பகடிவதை சம்பவங்களில் ஈடுபட்டவர்களைப் பாதுகாக்கும் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் அல்லது கல்வி அதிகாரிகளுக்கு எதிராக, அமைச்சு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
இதனைத் தொடர்ந்து, ஃபட்லினா, பள்ளிப் பகடிவதை சம்பவங்களில் சமரசம் செய்யப்போவதில்லை என்றும், மாணவர்களின் நன்னெறி, உளவியல் நலனுக்காக, பல்வேறு ஆதரவுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் உறுதிப்படுத்தினார்.




