Tamilnadu
oi-Rajkumar R
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினரான அன்புமணி ராமதாஸ், தனது குடும்பத்தினருடன் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை மேற்கொண்டுள்ளார். அவருடன், அவரது மனைவி சௌமியா அன்புமணி, பேரன் மற்றும் பேத்திகளுடன் இணைந்து இருமுடி கட்டி சபரிமலையில் தரிசனம் செய்துள்ளார்.
தமிழக அரசியலில் முக்கிய தலைவர்களி ஒருவரான அன்புமணி ராமதாஸ், அரசியல் பணிகளுக்கு இடையே ஆன்மிக நிகழ்வுகளிலும் தொடர்ந்து பங்கேற்று வருபவர். அதோடு தமிழகத்தின் பல்வேறு கோவில்களுக்கு அவர் அடிக்கடி செல்வது வழக்கம்.
அந்த வகையில், இந்தாண்டு சபரிமலையில் ஐயப்பன் கோவிலுக்கு சென்ற அவர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்துள்ளார். சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் வழக்கமாக 41 நாட்கள் விரதம் இருந்து, கடுமையான ஒழுக்க முறைகளை பின்பற்றுவது மரபாக உள்ளது.

அதன்படி அன்புமணி ராமதாஸும் கடந்த வாரம் மனைவியுடன் மாலை அணிந்து தனது விரதத்தைத் தொடங்கினார். சென்னை உத்தண்டியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்ற அவர், அங்கு சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்றார். பின்னர் குருசாமியின் முன்னிலையில் மாலை அணிந்து விரதத்தை ஆரம்பித்தார். அவருடன் அவரது பேரன், பேத்திகளும் மாலை அணிந்தனர்.
விரத காலத்தை கடைபிடித்த பிறகு, அன்புமணி ராமதாஸ் பாரம்பரிய முறையில் இருமுடி கட்டிக்கொண்டார். சென்னை மகாபலிபுரம் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இருமுடி கட்டிய அவர், பின்னர் குடும்பத்தினருடன் சபரிமலை நோக்கி புறப்பட்டார். ஐயப்ப யாத்திரையின் முக்கிய அங்கமாக கருதப்படும் காட்டுப்பாதை மூலமாக நடந்தே சென்ற அவர் சாமி தரிசனம் செய்தார்.
அவருடன் அவரது மனைவி சௌமியா அன்புமணி மற்றும் பேரக்குழந்தைகளும் சுவாமி தரிசனம் செய்தனர். 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி தர்மபுரி தொகுதியில் இரண்டாம் இடம் பெற்று தோல்வியடைந்தார்.
இதை அடுத்து முதன் முறையாக கடந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்ற அவர் மனம் உருக ஐயப்பனை தரிசனம் செய்தார். தொடர்ந்து 2026 சட்டமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியிலேயே போட்டியிட்டு வென்றுள்ள சௌமியா அன்புமணி தற்போது இரண்டாவது முறையாக கணவருடன் ஐயப்பனை தரிசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



