புக்கிட் அவாங் பெசார் லைட் ரெயில் டிரான்சிட் (எல்ஆர்டி) நிலையம் அருகே சாலையோரம் இருந்த 6 கார்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய சந்தேகத்தின் பேரில் செராஸ் ரசாக் மேன்ஷனில் 42 வயது நபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். நேற்று (ஜூலை 10) இரவு 7 மணியளவில், செராஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த நபரின் பின்னணியை பார்க்கும்போது போதைப்பொருள் மற்றும் கிரிமினல் குற்றங்களில் குற்றவியல் பதிவு இருப்பதை காட்டுகிறது என்று செராஸ் மாவட்ட காவல்துறைத் தலைமை உதவி ஆணையர் ரவீந்தர் சிங் கூறினார். சந்தேக நபர் செராஸில் திருடுதல் மற்றும் உடைத்தல் போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
போலீஸ் விசாரணைகளை எளிதாக்கும் வகையில் வெள்ளிக்கிழமை வரை மூன்று நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவாங் பெசார் எல்ஆர்டி பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சில கார்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டதைக் காட்டும் 47 வினாடிகள் கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. திங்கள்கிழமை பிற்பகல் 3 மணியளவில் உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை அங்கு நிறுத்தி, மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வாகனங்களை எடுக்கச் சென்றபோது கண்ணாடிகள் உடைக்கப்பட்டதைக் கண்டு புகார் அளித்தனர்.


