கோலாலம்பூர்:
மலேசியா மற்றும் தாய்லாந்துக்கிடையே ஏற்கனவே இயக்கப்பட்டுவந்த கோலாலம்பூர் மற்றும் பாங்காக் இடையேயான நேரடி ரயில் சேவையை இந்த ஆண்டு மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ ஃபூக் தெரிவித்தார்.
பாங்காக், பாடாங் பெசார், பட்டர்வொர்த் மற்றும் கோலாலம்பூரை இணைக்கும் தற்போதைய ரயில் பாதையைப் பயன்படுத்த முடியும் என்பதால், இந்த சேவையை விரைவாக அறிமுகப்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.
“கோலாலம்பூர்-பாங்காக் ரயில் சேவை நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான ஆரம்ப தயாரிப்புகளை மேற்கொள்வதற்காக கெரெட்டாபி தனா மெலாயு பெர்ஹாட் (KTM) மற்றும் தாய்லாந்து மாநில ரயில்வே (SRT) ஆகியவற்றுக்கு மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது, என்று அவர் நேற்று வெள்ளிக்கிழமை தாய்லாந்திற்கு ஒரு நாள் பணிப் பயணத்தை முடித்த பின்னர், செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த விஜயத்தின் போது, தாய்லாந்தின் துணைப் பிரதமரும் போக்குவரத்து அமைச்சருமான சூரிய ஜுவான்க்ரூங்ருவாங்கிட்டை லோக் சந்தித்தார்.
இதற்கிடையில், சுங்கை கோலோக்கிலிருந்து மலேசியாவில் உள்ள ரந்தாவ் பஞ்சாங்க் மற்றும் பாசிர் மாஸ் வரை ரயில் சேவைகளை நீட்டிக்க தாய்லாந்து அதிகாரிகள் முன்மொழிந்துள்ளதாகவும் லோக் கூறினார்.


