Last Updated:
ஸ்ட்ரைக் ரேட் முக்கியம் தான். ஆனால் நீங்கள் சேசிங் செய்யும்போது, ஸ்கோர்போர்டைப் பார்த்தே விளையாடலாம்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 பிரிவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மேட்ச்சில் இந்திய அணி படுதோல்வியடைந்தது. இதனால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு சிக்கலாக மாறியுள்ள நிலையில், இந்திய அணியின் பேட்டிங் குறித்து முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
குறிப்பாக, இந்திய அணியின் ‘ரன் சேஸிங்’ திறன் குறித்துப் பேசிய அவர், விராட் கோலி இல்லாத நிலையில் 160-க்கும் மேற்பட்ட ரன்களைத் துரத்துவதில் இந்தியா சந்திக்கும் சிரமங்களைச் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய அணியில் உள்ள சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் பொறுப்பை ஏற்று, கோலியைப் போல ஆட்டத்தை இறுதிவரை நின்று முடித்துக் கொடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுபற்றி மேலும் அவர் கூறியதாவது-
160 ரன்களுக்கு மேலான இலக்கை இந்தியா சேசிங் ஜெயித்தது என்றால், அது விராட் கோலி ரன் அடித்தபோது மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது. உலகக் கோப்பையில் கோலி இல்லாமல் 160+ ரன்களை இந்தியா சேசிங் செய்து வென்றதே இல்லை.
யாராவது ஒருவர் விராட் கோலியாக மாற வேண்டும். யாராவது ஒருவர் போட்டியை முடித்துக் கொடுக்க வேண்டும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மேட்ச்சின்போது பலருக்கு விராட் கோலியாக மாறும் வாய்ப்பு கிடைத்தது. திலக் வர்மாவுக்கு வாய்ப்பு இருந்தது, சூர்யகுமார் யாதவிற்கும், சிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியாவிற்கும் வாய்ப்பு இருந்தது.
கோலி எப்படி போட்டிகளை முடித்துக் கொடுத்தார் என்று பார்க்க வேண்டும். நாம் ஸ்ட்ரைக் ரேட் பற்றிப் பேசுகிறோம். ஸ்ட்ரைக் ரேட் முக்கியம் தான். ஆனால் நீங்கள் சேசிங் செய்யும்போது, ஸ்கோர்போர்டைப் பார்த்தே விளையாடலாம். அப்போது ஸ்ட்ரைக் ரேட் முக்கியமல்ல, போட்டியை வெல்வதே முக்கியம்.


