Last Updated:
வங்கதேசத்தில் இன்று 13வது நாடாளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி முடிவுக்கு வந்தபின்னர், முகமது யூனஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. கடந்த 18 மாதங்களாக அங்கு இடைக்கால அரசின் ஆட்சி தொடர்ந்த நிலையில், இன்று 13வது நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அமைதியாக தேர்தலை நடத்தி முடிக்க, சுமார் 10 லட்சம் பேர் பாதுகாப்புப்படையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக நாடாளுமன்றத்தில் 300 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு தொகுதியில் வேட்பாளர் மறைந்ததால் அங்கு மட்டும் தேர்தல் ரத்தானது. இதனால் தற்போது 299 தொகுதிகளில் 50 கட்சிகளை சேர்ந்த 1,755 வேட்பாளர்கள் மற்றும் 273 சுயேட்சைகள் களத்தில் உள்ளனர்.
வங்கதேச தேர்தல்
முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் வழிநடத்தும் பிஎன்பி கட்சிக்கும், அதன் முன்னாள் கூட்டணிக் கட்சியான ஜமாத்-ஏ-இஸ்லாமிக்கும் இடையே தற்போது நேரடி மோதல் நிலவுகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 4.30 வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுடன், 84 அம்ச ஜனநாயக சீர்திருத்தங்களை உள்ளடக்கிய ‘ஜூலை தேசிய சாசனம் 2025’ மீதான மக்கள் வாக்கெடுப்பும் நடைபெறுகிறது.
Feb 12, 2026 10:17 AM IST


