பற்றி எரியும் ஈரான் : விமான நிலையத்தை குறி வைத்து குண்டு மழை பொழிந்த அமெரிக்கா..!!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. பிப்ரவரி மாதம் தொடங்கி 3 மாதம் நீடித்த போர் அமைதியை நோக்கி சென்ற நிலையில் மீண்டும் இருநாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளன. சர்வதேச கடல் பகுதியில் ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கூறி, ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்களை தொடங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் உடனான போர் நிறுத்தம் முடிந்துவிட்டது என பகிரங்கமாக அறிவித்தார். இதனை அடுத்து அமெரிக்கா தீவிரமாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஈரானின் இரான்ஷாஹர் விமான நிலையம் குறிவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை அச்சுறுத்தும் ஈரானின் நடவடிக்கைக்கு பதிலடியாகவே இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டும் அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத ஒரு தாக்குதலை ஈரான் சந்திக்கும் என எச்சரித்துள்ளது. இந்தத் தாக்குதலின் ஒரு பகுதியாக புஷெர் , பந்தர் அப்பாஸ், சிரிக் மற்றும் கொனாரக்-சபஹார் ஆகிய நகரங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில் பல வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஈரான் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. மீண்டும் இது தொடர்ந்தால், நிலைமை இன்னும் மோசமாகும் என ஈரான் நாட்டிற்கு அவர் கடும் எச்சரிக்கை விடுத்தார்.

ஈரானின் வெளியுறவு அமைச்சகம், அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் தங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தை மீறும் செயல் என குற்றம் சாட்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை அமெரிக்கா மீறி, ஆக்ரோஷமான தாக்குதல்களை நடத்துகிறது என ஈரான் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், ஈரான் தரப்பில் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ள டிரம்ப், அதே நேரத்தில் அவர்கள் மீது நம்பிக்கை வைப்பது கடினம் எனத் தெரிவித்தார். ஈரானுடன் ஒப்பந்தம் செய்யலாமா என தெரியவில்லை. ஏற்கனவே ராணுவ ரீதியாக நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம். அவர்கள் ஒப்பந்தம் செய்ய துடிக்கிறார்கள், ஆனால் அவர்களால் சொன்ன சொல்லை காப்பாற்ற முடியுமா என்பதுதான் பெரிய கேள்வி என டிரம்ப் கூறியுள்ளார்.
தற்போதைய இந்த மோதலால் மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் மீண்டும் 70 டாலருக்கு மேல் வர்த்தகமாகி வருகிறது. போர் தீவிரமடைந்தால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரை நோக்கி செல்ல வாய்ப்புள்ளது. இதனால் பெரிதும் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்க போகிறது.

