குளுவாங்:
குழந்தை பராமரிப்பு நிலையத்தில் ஐந்து மாதக் குழந்தையை சித்ரவதை செய்ததாக குழந்தை பராமரிப்பாளர் ஒருவருக்கு எதிராக குளுவாங் அமர்வு நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
இருப்பினும் குற்றஞ்சாட்டப்பட்டவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து, விசாரணை கோரினார்.
நீதிபதி ஒஸ்மான் அஃபெண்டி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, குற்றஞ்சாட்டப்பட்ட 20 வயதுடைய அமீரா ஹஜிரா முஹமட் ஃபாரிட் , குற்றச்ச்சாட்டுக்கள் புரிந்ததாக தலையசைத்தார்.
கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி காலை 7 மணியளவில் ஐந்து மாத குழந்தைக்கு காயம் விளைவித்ததாக குத்தப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
2001ஆம் ஆண்டு சிறார்கள் சட்டத்தின் கீழ் குழந்தை பராமரிப்பாளர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறை தண்டனை, 50 ஆயிரத்திற்கும் மேற்போகாத அபராதம் விதிக்கப்படும்,
ஆவணங்கள் சமர்ப்பிப்பு நடவடிக்கைக்காக இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் 13ஆம் தேதி நீதிமன்றத்தால் மீண்டும் செவிமடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


