பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரியான்ஷ் ஆர்யாவின் ஆட்டத்தை சென்னை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்கமாட்டார்கள். நேற்று முன்தினம் சண்டிகரில் நடந்த சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 24 வயதான பிரியான்ஷ் ஆர்யா, வெறும் 39 பந்துகளில் சதமடித்து சென்னை வீரர்களை மிரள வைத்தார். ஆட்டத்தின் தொடக்கத்தில் கலீல் அஹமது, முகேஷ் சௌத்ரி, அஸ்வின் என சென்னையின் பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து ஷாக் கொடுக்க, அதைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல், சென்னையின் பந்துவீச்சாளர்களை விழி பிதுங்க வைக்கும் வகையில் பிரியான்ஷ் ஆர்யா அட்டாக்கிங் ஆட்டத்தை தொடங்கினார்.
தனது இன்னிங்ஸை சிக்ஸருடன் தொடங்கிய பிரியான்ஷ் ஆர்யா, கலீல் அஹமது வீசிய முதல் ஓவரிலேயே 2 சிக்ஸர்களை பறக்கவிட்டுதான் ஆரம்பித்தார். அஸ்வின், முகேஷ் சௌத்ரியின் ஓவரிலும் பவுண்டரியையும் சிக்ஸர் என வெளுத்தார். நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த பந்துவீச்சாளராக அறியப்படும் நூர் அஹமதுவுக்கு எதிராகவும் ஹெவி அட்டாக் செய்த பிரியான்ஷ் ஆர்யா, பதிரனாவின் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்து 39 பந்துகளிலேயே சதம் கடந்தார்.
இதற்கிடையே, சதம் அடித்த அன்று இரவு மூன்று மணி வரை பிரியான்ஷ் ஆர்யா தூங்கவில்லையாம். இதனை வெளிப்படுத்தியுள்ள அவரின் சிறுவயது பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ், அவர் எப்போதும் அப்படித்தான், மிகவும் பணிவானவர் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், சதம் அடித்ததை பற்றி கேட்டபோது, அது கடவுளின் செயல் என்று மட்டும் பணிவோடு பிரியான்ஷ் ஆர்யா கூறியதாக பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ் கூறியுள்ளார்.
டெல்லி கிரிக்கெட் வட்டாரங்களில் ‘குருஜி’ என்று அழைக்கப்படும் பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ் பயிற்சி அளித்தது பிரியான்ஷ் ஆர்யா மட்டுமல்ல, கவுதம் கம்பீர், நிதிஷ் ராணா மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோருக்கும் பயிற்சியாளர் இவர் தான்.
யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?
24 வயதாகும் பிரியான்ஷ் ஆர்யா, டெல்லியை சேர்ந்தவர். டெல்லி ப்ரீமியர் லீக்கில் ஒரு போட்டியில் ஓவரின் 6 பந்துகளையும் சிக்ஸர் அடித்தவர், 2024 டெல்லி ப்ரீமியர் லீக்கில் மட்டும் 608 ரன்களை எடுத்து அந்தத் தொடரின் அதிக ரன்களை அடித்த வீரரானார். மேலும், சையது முஷ்டாக் அலி தொடரிலும் ஒரு சீசனில் டெல்லி அணியின் அதிக ரன்களை அடித்த வீரராக திகழ்ந்தார். இதனால்தான் அவரை ஏலத்தில் போட்டி போட்டு 3.8 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது.
இந்த நிலையில் தான் ஐபிஎல் தொடங்கும் முன்னதாக நடந்த பயிற்சி ஆட்டத்தில் சுமார் எட்டு பந்துகளை மட்டுமே சந்தித்த அவரின் ஆட்டத்தை பார்த்த பஞ்சாப் பயிற்சியாளர் பிராட் ஹாடின், அவரை முதல் போட்டியிலேயே விளையாட வைத்துள்ளார். அந்த அளவுக்கு பிரியான்ஷ் ஆர்யாவின் ஆட்டம் இருந்துள்ளது. எந்த சூழ்நிலை இருந்தாலும் பயமில்லாமல் விளையாடும் அவரின் திறன் பயிற்சி போட்டியிலேயே பிராட் ஹாடினை கவர, அதனை வைத்தே முதல் போட்டியிலேயே களமிறக்கியுள்ளார்.
அப்படி வாய்ப்பு கிடைக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 245.24 ஸ்ட்ரைக் ரேட் உடன், ஏழு பவுண்டரிகள் மற்றும் ஒன்பது சிக்ஸர்கள் உடன் ஐபிஎல் வரலாற்றில் ஐந்தாவது வேகமான சதத்தை பதிவு செய்தார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
April 10, 2025 10:43 AM IST

