நாடு முழுவதும் இருக்கும் ஆயிரக்கணக்கான வழித்தடங்களில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதில், பல லட்சம் பேர் பயணிக்கும் நிலையில், அடுத்த மாதம் முதல் சில ரயில்களில் ஏசி சேர் கார் மற்றும் 2ஆம் வகுப்பு ஏசி பெட்டிகள் கிடைக்காவிட்டால் ஆச்சரியப்பட வேண்டாம் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரிப் ரத் என்ற பெயரில் 26 வழித் தடங்களில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து டெல்லிக்கும், திருவனந்தபுரத்திற்கும் கரிப் ரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் மற்ற ரயில்களுடன் ஒப்பிடும்போது சேர் கார் மற்றும் ஏசி பெட்டிகளின் கட்டணம் சற்று குறைவு. அதாவது, மற்ற ரயில்களை விட 8 முதல் 10 சதவீதம் வரை கட்டணம் குறைவாகவே இருக்கிறது. இந்த ரயில்கள் முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் காலத்தில் தொடங்கப்பட்டன.
சென்னையில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை, கபுர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலை, ரேபரேலி ரயில் பெட்டி தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட இந்த பெட்டிகளின் வயது சுமார் 18 ஆண்டுகள் ஆகி, மிகவும் பழையதாகி விட்டன. தற்போது வரும் பயணிகளுக்கு போதிய வசதிகள் இந்த ரயில் பெட்டிகளில் இல்லை என்பதால், அவற்றை மாற்ற ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
வழக்கமாக கரிப் ரத் ரயில்களில் சேர் கார், இரண்டாவது மற்றும் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் இருக்கும். ஆனால், இனிமேல் இரண்டாது ஏசி பெட்டியும், சேர் கார் வசதியும் அகற்றப்பட்டு, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டி மட்டுமே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயிலில் 120 நாட்களுக்கு முன்னதாகவே முன்பதிவு தொடங்குவதால், அடுத்த மாதம் முதல் கரிப் ரத் ரயில்களில் இரண்டாவது ஏசி வகுப்பு மற்றும் சேர் கார் வசதி இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக, பாட்டில்களை தொங்க விடுவதற்கான கைப்பிடிகள், மடிக்கக் கூடிய ஸ்நாக்ஸ் டேபிள்கள், நவீன கழிப்பறைகள் மற்றும் அனைத்து பெர்த்களிலும் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய நவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு, விரைவில் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
