பயங்கரவாதத்திலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் அனைத்து உரிமையும் இந்தியாவுக்கு உள்ளது என்று ஜெர்மனி தெரிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் பற்றி, இந்தியா தரப்பில் கொடுத்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, ஜெர்மனி இந்தியாவுக்கு தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது.
ஜெர்மனி சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜெர்மனி நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஹன் வதேபாலை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியா தரப்பில் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை குறித்து விளக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சந்திப்புக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ஜெர்மன் அமைச்சர், பஹல்காமில், சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வதாகவும், இந்த தாக்குதலால் ஜெர்மனி கடும் அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் எங்களது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அதன் பிறகு நடைபெற்ற சண்டை, அதாவது, இந்தியா, பயங்கரவாதத்திலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள அனைத்து உரிமைகளும் உள்ளது என்பதை ஜெர்மனி ஒப்புக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

