பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முப்படைகளும் இணைந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் தலைமையகங்கள் மீது தாக்குதல் நடத்தியது. ”அபரேஷன் சிந்தூர்” என பெயரிடப்பட்ட இந்த தாக்குதலில் 9 இலக்குகள் மீது இந்தியா குறிவைத்து வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த பாதுகாப்பு படையினர் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர், எந்தவித எதிர் தாக்குதலையும் சமாளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர். மேலும் இந்தியாவில் அமைதியை சீர்குலைக்கவே பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறிய வெளியுறவு செயலாளர், தீவிரவாதிகளின் உட்கட்டமைப்பை தகர்க்கவே ”ஆபரேஷன் சிந்தூர்” மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் கலந்துகொண்டு விளக்கம் கொடுத்தனர்.
யார் இந்த சோபியா குரேஷி?:
இந்திய ராணுவத்தின் சிக்னல்ஸ் படைப்பிரிவின் அதிகாரி தான் கர்னல் சோபியா குரேஷி. குஜராத்தைச் சேர்ந்த இவர் உயிர் வேதியியல் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அவரது தாத்தா இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். ஒரு ராணுவ குடும்பத்தைச் சேர்ந்த அவர், இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படையின் அதிகாரியை மணந்தார்.
ஒப்பீட்டளவில் இளம் வயதிலேயே, பெண்கள் மற்றும் இந்திய ராணுவம் இரண்டிலும் சரித்திரம் படைத்துள்ளார். மார்ச் 2016 இல், பன்னாட்டு ராணுவப் பயிற்சியில் ராணுவப் படையை வழிநடத்திய முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றார்.
‘Force18’ என்று பெயரிடப்பட்ட இந்தப் பயிற்சி, இந்தியா நடத்திய மிகப்பெரிய வெளிநாட்டு ராணுவப் பயிற்சிகளில் ஒன்றாகும். பங்கேற்பாளர்களாக ASEAN (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்) உறுப்பினர்கள், இந்தியா, ஜப்பான், சீனா, ரஷ்யா, அமெரிக்கா, கொரியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கலந்துகொண்டது. மொத்தம் 18 படையினர் பங்கேற்ற இந்த பயிற்சியில், படையை வழிநடத்திய ஒரே பெண் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் குரேஷி என பெயர் பெற்றார்.
சோபியா 2006 இல் காங்கோவில் ஐ.நா. அமைதி காக்கும் பணியில் பணியாற்றினார். இந்தப் பணிக்காக நாட்டில் உள்ள ஏராளமான அமைதி காக்கும் பயிற்சியாளர்களில் இருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 2010 முதல் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
Operation Sindoor | பன்னாட்டு ராணுவப் பயிற்சியில் இந்திய படையை வழிநடத்திய முதல் பெண் அதிகாரி..! யார் இந்த கர்னல் சோபியா குரேஷி?

