International
oi-Nantha Kumar R
நார்வே: அசந்து தூங்கி கொண்டிருந்த பனிக்கரடியின் தூக்கத்துக்கு இடையூறு செய்து எழுப்பிய புகாரில் படகு ஓட்டுநருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. பனிக்கரடியை தூக்கத்தை கலைத்ததற்கும் அபராதம் விதிப்பார்களா? என்று நீங்கள் கேட்டால் அந்த நாட்டின் சட்டம் அப்படியாக உள்ளது. இந்த சம்பவம் எங்கு நடந்தது? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
நார்வே நாட்டுக்கு சொந்தமாக ஸ்வால்பார்டின் என்ற தீவுக்கூட்டம் உள்ளது. இது நார்வே நாட்டின் வடதுருவத்தில் இருந்து சுமார் 620 மைல் தொலைவில் தனியாக அமைந்துள்ளது. ஆர்க்டிக் பெருங்கடலும், அட்லாண்டிக் பெருங்கடலும் சந்திக்கும் இடத்தில் இந்து தீவுக்கூட்டம் உள்ளது.

இது முழுவதும் பனிப்பிரதேசமாகும். இங்கு ஏராளமான பனிக்கரடிகள் வசித்து வருகின்றன. ஆண்டுதோறும் இங்கு சுற்றுலா பயணிகள் ஏராளமாக வந்து செல்கின்றனர்.
ஒருகாலத்தில் இங்கு அதிகளவில் பனிக்கரடிகள் இருந்தன. அதன்பிறகு பனிக்கரடிகளின் எண்ணிக்கை குறைய தொடங்கியது. இதனால் 1972ம் ஆண்டு முதல் பனிக்கரடிகளின் எண்ணிக்கையை பாதுகாக்க ஸ்வால்பார்ட் தீவில் அவை பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அதோடு இந்த பனிக்கரடியை சுற்றுலா பயணிகள் தொந்தரவு செய்யவும், தூரத்துவதும் குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் தான் படகில் ஒருவர் சென்றார். அப்போது கரைப்பகுதியில் பனிக்கரடி இருந்தது. அந்த கரடிதூங்கி கொண்டிருந்தது. இதனை பார்த்த படகு ஓட்டுநர் ‘ஃபாக்ஹார்ன்’ அடித்தார். இந்த சத்தத்தில் தூக்கம் கலைந்த பனிக்கரடி அங்கிருந்து வேகமாக ஓடியது. இதனை அங்கிருந்தவர்கள் அதிகாரிகளிடம் புகாராக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஸ்வாலர்பார்ட் ஆளுநர் லார்ஸ் ஃபவுஸ் விசாரணை மேற்கொண்டார். அதில் படகு ஓட்டுநர் வேண்டுமென்றே ஹார்ன் அடித்து பனிக்கரடிக்கு இடையூறு செய்தது தெரியவந்தது. பனிக்கரடி எப்படி ஓடுகிறது? என்பதை பார்க்க விரும்பி அவர் ‘ஹார்ன்’ அடித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அபருக்கு பெரும் தொகை அபராதமாக விதிக்கப்பட்டது. படகு ஓட்டுநருக்கு 50 ஆயிரம் நார்வேஜியன் குரோனர் கரன்சியில் அபராதம் விதிக்கப்பட்டது. இதன் இந்திய மதிப்பு ரூ.4.50 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இருக்கும். அதனை படகு ஓட்டுநர் செலுத்த ஒப்புக்கொண்டார். இருப்பினும் அவரது பெயர் உள்பட பிற விவரங்கள் வெளியாகவில்லை.
இப்படி அபராதம் விதிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 2024ம் ஆண்டில் walrus உயிரினத்த்தின் மிக அருகில் சென்ற சுற்றுலா பயணிக்கு ரூ.1.16 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


