கோலாலம்பூர்:
குடியிருப்புப் பகுதி ஒன்றில் பூனைக்குட்டியை கொடூரமாகத் தாக்கிச் சித்திரவதை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரது வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, குறித்த ஆடவர் பத்து காஜா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் தானாக முன்வந்து சரணடைந்ததைத் தொடர்ந்து போலிசாரால் கைது செய்யப்பட்டார்.
நேற்று மதியம் 12.04 மணியளவில் இச்சம்பவம் குறித்த தகவல் போலீசாருக்குக் கிடைத்ததாகப் பத்து காஜா மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையர் முகமட் நோர் எஹாவான் முகமட் தெரிவித்தார்.
இச்சம்பவத்தைப் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் தனது கைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். 2 நிமிடம் 19 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், சந்தேகநபர் தனது வீட்டின் வாகன நிறுத்துமிடத்தில் வைத்துப் பூனைக்குட்டியை அலுமினியத் துடைப்பத்தால் பலமுறை கொடூரமாக அடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
சரணடைந்த பின்னர் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். தனது காரின் எஞ்சின் பகுதிக்குள் பூனைக்குட்டி புகுந்துவிட்டதாகவும், எஞ்சினை இயக்கினால் பூனைக்கும் ஆபத்து ஏற்படுவதுடன் கார் பழுதாகிவிடும் என்ற அச்சத்திலுமே இவ்வாறு நடந்துகொண்டதாக அவர் கூறியுள்ளார்.
தாக்கப்பட்ட அந்தப் பூனைக்குட்டி உயிருடன் மீட்டெடுக்கப்பட்டுள்ளது, பக்கத்து வீட்டுக்காரரால் மீட்கப்பட்ட பூனைக்குட்டி, இன்று சிகிச்சைக்காகக் கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்த மருத்துவ அறிக்கை பெறப்பட்டு விசாரணை முழுமைப்படுத்தப்படும்.
இச்சம்பவம் தொடர்பாகக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 428 (விலங்குகளுக்குத் தீங்கு விளைவித்தல்) மற்றும் 2015-ஆம் ஆண்டு விலங்குகள் நலச் சட்டத்தின் பிரிவு 29(1)(a) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும், விலங்குகளுக்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் போலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
The post பத்து காஜாவில் பூனைக்குட்டியை அலுமினியத் துடைப்பத்தால் அடித்த நபர் கைது! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

