Last Updated:
இந்தக் கொடூரச் செயல், தெலங்கானா போலீசாரின் சாதுர்யமான நடவடிக்கையால் வெளிச்சத்திற்கு வந்தது
மகாராஷ்டிராவில் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தனது 6 வயது மகளையே தந்தை கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம், நாந்தேட் மாவட்டத்தின் கேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டுரங் கொண்டமங்கலே. 26 வயதாகும் இவர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பினார். இருப்பினும், மகாராஷ்டிரா சட்டப்படி இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர்கள் என்பதால், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான பாண்டுரங்கிற்கு இது தடையாக இருந்தது.
முதலில் தனது ஒரு பெண் குழந்தையைத் தத்துக் கொடுத்துவிட முயன்ற அவர், பிறப்புச் சான்றிதழில் பெயர் ஏற்கனவே பதிவாகியுள்ளதால் அது பலனளிக்காது என்பதை உணர்ந்தார். இதனால், தனது அரசியல் ஆசைக்காக 6 வயது மகள் பிராசியைக் கொலை செய்யத் திட்டமிட்டு, கடந்த ஜனவரி 29 அன்று தெலங்கானாவிற்கு அழைத்துச் சென்று அங்குள்ள நிசாம்சாகர் கால்வாயில் தள்ளிவிட்டுக் கொலை செய்துள்ளார்.
இந்தக் கொடூரச் செயல், தெலங்கானா போலீசாரின் சாதுர்யமான நடவடிக்கையால் வெளிச்சத்திற்கு வந்தது. கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தைத் தெலங்கானா காவலர் ஒருவர் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைக்க, அதைப் பார்த்த மகாராஷ்டிரா போலீசார் சிறுமியை அடையாளம் கண்டனர்.
இதன்பின்னர் போலீசாரின் தீவிர விசாரணையில், பாண்டுரங் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இச்சம்பவத்தில் அவருக்கு உடந்தையாக இருந்த அதே கிராமத்தின் சர்பஞ்ச் கணேஷ் ஷிண்டே என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


