காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், சுமார் 5 லட்சம் மக்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐநா தெரிவித்திருக்கிறது. பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்றுதான் ஹமாஸ். இந்த ஹமாஸை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத அமைப்பாக பட்டியலிட்டிருக்கிறது. இந்த அமைப்பு கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி திடீரென தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடி கொடுப்பதாக கூறி 200 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவம், காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. இதில் 37 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். 75% பேர் குழந்தைகள் என பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐநா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
ஆனால் போர் தற்போது வரை நிற்கவில்லை. நாளுக்கு நாள் தனது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், காசாவில் சுமார் 5 லட்சம் மக்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐநா கூறியுள்ளது. காசாவின் நிலைமை பேரழிவு தரக்கூடியதாக உள்ளது. காசா முழுவதும் பஞ்சத்தின் தாக்கம் நீடித்திருக்கிறது என்று ஐநா கூறியிருக்கிறது. 4.95 லட்சம் பாலஸ்தீனர்கள் கடுமையான உணவு பஞ்சத்தில் சிக்கி தவித்திருக்கின்றனர்.
அதேபோல, 7.4 லட்சம் மக்கள் உணவு பாதுகாப்பு அவசரநிலையில் உள்ளனர். போர் காரணமாக சர்வதேச நாடுகள் அனுப்பும் உதவி காசாவுக்குள் செல்லவில்லை என்று ஐநா கூறியுள்ளது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுத்திருக்கிறது.
ஏற்கெனவே போர் காரணமாக காசாவில் இனி வரும் நாட்கள் நரகமாக இருக்கும் என ஐநா பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். சமீபத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் மாநாடு நடைபெற்றது. இதில், மத்திய கிழக்கு அமைதி செயல்முறைக்கான ஐ.நா. சிறப்பு ஒருங்கிணைப்பாளர் டோர் வென்னஸ்லேண்ட், காசா மற்றும் மேற்கு கரையில் இனி வரும் நாட்களில் நெருக்கடிகள் அதிகரிக்கும் என்று கூறியிருந்தார்.
“இஸ்ரேலின் தாக்குதல் இப்பிராந்தியத்திற்கு மேலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இஸ்ரேலிய குடியேற்ற விரிவாக்கங்கள் சட்டப்பூர்வமானது கிடையாது. சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா தீர்மானங்களை அப்பட்டமாக இஸ்ரேல் மீறுகிறது. அனைத்து தாக்குதல் நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேல் அரசாங்கத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மருத்துவமனைகள், ஐநா அலுவலகங்களை தவிர ஏறத்தாழ அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டது. இந்த போரில் குற்றத்தில் ஈடுபட்ட அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்” என்றும் கூறியுள்ளார். இஸ்ரேலின் தாக்குதல் குறித்து சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஐநா அதிகாரியின் இந்த குற்றச்சாட்டு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
The post பசி பட்டினியில் தவிக்கும் 5 லட்சம் பாலஸ்தீனர்கள்! நரகமாகும் காசா.. ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

