அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு முறையான திட்டமிடல் இல்லாததால், அரசாங்கக் களஞ்சியங்களில் உள்ள நெல் கையிருப்புகளை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.
வசந்த சமரசிங்கவுக்கு நெருக்கமான ஒரு ஆலை உரிமையாளர் குறித்து குற்றம் சுமத்திய முதித் பெரேரா, அவர் முன்னர் பசில் ராஜபக்சவுக்கு ஆதரவாக செயற்பட்டவர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
வசந்த சமரசிங்கவின் செயற்பாடு
”அமைச்சர் வசந்த சமரசிங்கவின் செயற்பாடுகள் காரணமாக அரசாங்க களஞ்சியங்களில் நெல்மூட்டைகள் நிரம்பி வழிகின்றன.

தேர்தல் பிரசாரத்திற்காகப் பணம் செலவழித்த ஒரு நண்பருக்குப் பயனளிக்கும் வகையில், நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கையிருப்புகளை அரைத்து அரிசியாக்கும் டெண்டரை கையளிப்பதற்கு வசந்த சமரசிங்க ஒரு சூட்சும முயற்சியை மேற்கொண்டிருந்தார்.
அமைச்சின் மட்டத்தில் செயல்படும் இந்த அரிசி மாஃபியாவால் ஜனாதிபதி கூட தவறாக வழிநடத்தப்படுகிறார்.
சில மாதங்களுக்கு முன்னதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் கையிருப்பில் உள்ள நெல்லை அரைத்து அரிசியாக்குவதற்காக, வரலாற்றில் இதற்கு முன் இல்லாத வகையில் ஒரு விசித்திரமான டெண்டர் கோரப்பட்டது.
அந்த டெண்டர் நிபந்தனைகள் வசந்த சமரசிங்கவுக்கு நெருக்கமான ஒரு ஆலை உரிமையாளரைக்குச் சாதகமான வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
குறித்த அரைக்கும் ஆலை உரிமையாளர், முன்னர் பசில் ராஜபக்சவுடன் நெருக்கமாகப் பணியாற்றியவர் என்பதுடன், கடந்த முறை வசந்த சமரசிங்கவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதிப் பங்களிப்புகளை வழங்கியிருந்தார்.
விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
இந்த ஊழல் செயல்முறைக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு அளித்திருந்தோம். எனினும் முறைப்பாடு அளிக்கப்பட்ட நான்கு மணி நேரத்திற்குள் அரசாங்கம் சம்பந்தப்பட்ட டெண்டரைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுத்திருந்தது.

அரசாங்கத்திற்கு இழப்புகளை ஏற்படுத்திய குறித்த ஆவணங்களில், வசந்த சமரசிங்கவின் பல்கலைக்கழக நண்பரான கோசல வில்பாவ என்பவர் கையெழுத்திட்டிருந்தார்.
அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு முறையான திட்டமிடல் இல்லாததால், அரசாங்கக் களஞ்சியங்களில் உள்ள நெல் கையிருப்புகளை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

